மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி இன்று நாடு முழுவதும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்.19ம் தேதி நடக்கிறது. இந்த தேர்தலில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் வென்று மீண்டும் 3வது முறையாக பிரதமராக மோடியை ஆட்சியில் அமர வைப்பதற்காக பாஜக தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் தேதி அறிவித்து வேட்புமனு தாக்கல் செய்து பிரசாரத்தில் ஒவ்வொரு கட்சிகளும் ஈடுபட்டு வருகின்றன. இந்நேரத்தில் பாஜகவுடன் கூட்டணி அல்லாத எதிர்கட்சியினரின் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறை, சிபிஐ சோதனை நடத்தி வருகிறது. முக்கியமாக பழைய வழக்குகளை தூசி தட்டி மாநில முதல்வர்கள் கூட கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
பாஜகவுக்கு முக்கிய எதிரியான காங்கிரஸை வீழ்த்த பாஜக திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் 4 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. பிறகு அந்த கணக்குகளை தீர்ப்பாயத்தின் தலையீட்டால் நிபந்தனையுடன் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,823 கோடி வரி நிலுவை உள்ளதாக வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும், 135 கோடி ரூபாய் வலுக்கட்டாயமாக வருமான வரி துறை காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கில் இருந்து பிடித்தம் செய்துள்ளது. இதுபோன்ற பல்வேறு நெருக்கடிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. தேர்தல் தோல்வி பயத்தால் பாஜக தலைமையிலான மத்திய அரசு, அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்டவற்றின் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக, காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.