

சோழவந்தானில் மாணிக்கம் தாகூர் எம்பி-யை கண்டித்து, காங்கிரஸ் கட்சியினர் நூதன போராட்டம் நடத்தினர்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் காமராஜர் சிலை அருகில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதி மாணிக்கம் தாகூர் எம்பி-யைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சி சார்பில் கண் மற்றும் வாயில் கருப்பு துணி கட்டி காமராஜர் சிலைக்கு மனு கொடுக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு, மாநில துணைத்தலைவர் சங்கர பாண்டி தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் மணிமாறன் முன்னிலை வகித்தார். மாவட்ட தொழிற்சங்க தலைவர் பாலாஜி, மாநில பொதுச் செயலாளர் நளினி, தெற்கு மாவட்டத் தலைவர் ராஜா தேசிங், தேனி மாவட்டத் தலைவர் ஈஸ்வரன், செல்வகுமார், இளைஞர் காங்கிரஸ் மணிவண்ணன், வரிசை முகமது , முகமது இலியாஸ், சையது அபுதாஹீர், ரம்ஜான் தாட்கோ முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, சோழவந்தான் பாரத ஸ்டேட் வங்கி முன்பு இருந்து கோசங்கள் எழுப்பி ஊர்வலமாக வந்தனர். பின்னர், காமராஜர் சிலை முன்பு கண் மற்றும் வாயில் கருப்பு துணி கட்டி மாணிக்கம் தாகூர் எம்.பி.யை கண்டித்து, கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து, செல்வப் பெருந்தகைக்கு எதிராக செயல்படும் மாணிக்கம் தாக்கூர் எம்பி மீது காங்கிரஸ் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் கட்சிக்கு விரோதமாக செயல்படும் மாணிக்கம்தாகூர் எம்பி-யை கண்டிக்க வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறினார்கள்.

