கோவை சரவணம்பட்டியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் வளாகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு லேர்னிங் சொசைட்டிஸ் அன்-கான்பிரான்ஸ் 2025 எனும் தனித்துவம் கொண்ட கருத்தரங்கு துவங்குகிறது.

ஷிக் ஷண்டார் அன்டோலன் எனும் இயக்கத்தால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த கருத்தரங்கு பற்றிய செய்தியாளர் சந்திப்பு இன்று கோவை குமரகுரு சிட்டி சென்டர் வளாகத்தில் நடைபெற்றது. இதில் இந்த இயக்கத்தின் நிறுவனர் மணீஷ் ஜெயின், குமரகுரு பொறியியல் கல்லூரியின் உதவி துணை தலைவர் சரவணன் மற்றும் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்தவர்கள் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
அப்போது அவர்கள் பேசுகையில் இந்த தனித்துவம் கொண்ட கருத்தரங்கு வரும் ஜூன் 18 முதல் 22 வரை குமரகுரு கல்வி நிறுவனங்களில் நடைபெறுகிறது எனவும் இந்த நிகழ்வு சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைக்கும் சிந்தனை கொண்டவர்களை ஒன்றிணைக்கும் என கருதுவதாக கூறினர்.
இதில் மாற்று கல்வி நிபுணர்கள் உள்பட கல்வி கற்றல் துறையில் மாற்று சிந்தனை கொண்டவர்கள், கலைஞர்கள், இயற்கை விவசாயிகள், சமுதாயம் சார்ந்த தொழில்முனைவோர், சமூக செயற்பாட்டாளர்கள், சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், முதியவர்கள் என நாடு முழுவதும் இருந்து பல்வேறு துறைகளை சேர்ந்த 1000-1500 பேர் கலந்துகொள்ள உள்ளனர் என கூறினர்.
ஜூன் 20ம் தேதி அன்று கோவை மக்கள் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படும் என்றும் மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை நிகழ்வில் அவர்கள் பங்கேற்று, அவர்களின் படைப்புகள் பற்றி பகிர்ந்து கொள்ளலாம் என்றனர்.