• Tue. Feb 3rd, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆட்சியர் ஆய்வு..,

ByM.S.karthik

Sep 12, 2025

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், விளாச்சேரி ஆதிசிவன் நகரில் சர்குரு சுய உதவி குழுவினர் மானிய விலையில் வங்கி கடன் பெற்று மசாலா பொருட்கள் தயாரிக்கும் பணி செய்து வருவதை பார்வையிட்டார். பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் வகையில், அவர்களின் தயாரிப்புகளை டிஜிட்டல் தளங்கள் மூலம் சந்தைப்படுத்துவதற்கான பயிற்சிகள் பெற்று மின்னணு முறையில் சந்தைப்படுத்தவும், அரசின் காலை உணவு திட்டம் உள்ளிட்ட திட்டங்களுக்கு மசாலா தொகுப்பினை தயாரித்து வழங்கவும் மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தினார்.

பின்னர், விளாச்சேரி மொட்டமலை நகரில் பொன்வீழா கிராம சுயவேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு நீதியிலிருந்து அங்காள ஈஸ்வரி, சந்தானலட்சுமி,ஆறுமுகம் மற்றும் செல்வி ஆகிய 4 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்காக கட்டப்பட்ட தொழில் கூடத்தில் சுய உதவிக் குழுவினர் கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் பணியினை பார்வையிட்டார். இயற்கையாக எளிதில் மக்கும் தன்மையைக் கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் உற்பத்தி செய்து தயாரிப்புகளை டிஜிட்டல் தளங்கள் மூலம் சந்தைப்படுத்தி தொழிலை மேம்படுத்த மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அறிவுரை வழங்கினார்.

மேலும், சூரக்குளம் கிராமத்தில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த நிலையான பசுமை போர்வைக்கான இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயி திரு. சக்திவேல் அவர்கள் 1.5 ஏக்கர் பரப்பளவில் வேளாண் காடுகள் வளர்க்கப்பட்டுள்ளதை பார்வையிட்டார். தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாய நிலங்களின் வரப்புகளிலும், குறைந்த செலவில் வேளாண் காடுகள் வளர்க்க ஊக்குவிக்கப்படுகின்றன. இந்த இயக்கம் விவசாயிகளுக்கு மரக்கன்றுகளை விநியோகிப்பதன் மூலம், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கவும், கிராமப்புறங்களில் பசுமையை வளர்க்கவும் உதவுகிறது.

தொடர்ந்து, சூரக்குளம் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் இயந்திரயமாக்களுக்கான துணைத் திட்டத்தின் கீழ் வாலநேந்தல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி திரு.ரமேஷ் அவர்களுக்கு மானியத்தில் வழங்கப்பட்ட பவர் டில்லரின் பயன்பாடு மற்றும் விவசாயிகளுக்கு அவற்றால் ஏற்படும் பயன்கள் குறித்து ஆய்வு செய்தார். வளையப்பட்டி கிராமத்தில் தேசிய தோட்டக்கலைத் இயக்கத் திட்டத்தின் கீழ் விவசாயி நவநீதன் சொட்டுநீர் பாசனம் முறையில் சம்பங்கி பூ, மல்லிகைப்பூ மற்றும் அவரைக்காய் போன்றவற்றை பயிரிட்டுள்ளதை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே.பிரவீன் குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பிரபா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி மற்றும் திருப்பரங்குன்றம் வட்டாட்சியர் கவிதா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.