தமிழ்நாடு அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் மற்றும் வைகை தென்னை நார் குழுமம் இணைந்து, மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கரட்டுப்பட்டியில் தென்னை நார் மதிப்பு கூட்டு பொருட்கள் உற்பத்தி பயிற்சி முகாம் ஜனவரி 8,9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற்றது.

பயிற்சி முகாமில் தென்னை நார் பயன்படுத்தி நீடல்ஃபெல்ட், ரப்பரைச்ட் தாள், பல்வேறு தோட்டக்கலைப் பொருட்கள், தென்னை நார் மரப்பலகை உள்ளிட்ட மதிப்பு கூட்டு பொருட்களின் உற்பத்தி திறன்கள் பயிற்சியாக வழங்கப்பட்டன. கூடுதலாக, தென்னை நார் தொழிலில் தொழில் வாய்ப்புகள், உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகள், தமிழக அரசின் மானிய திட்டங்கள் ஆகியவற்றை பற்றிய ஆலோசனைகளும் இடம்பெற்றன.
இந்த பயிற்சி முகாமில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 20 தென்னை நார் சார்ந்த தொழில்முனைவோர்கள் கலந்து கொண்டனர். பயிற்சி ஒருங்கிணைப்பில் தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனம் சார்பாக மனோஜ் பிரபாகரன் அவர்களும் வைகை தென்னை நார் குழுமத்திலிருந்து இயக்குனர்கள் அருள் ஆனந்த், டென்னிசன், மற்றும் .சரவணன், ஆகியோர்கள் பயிற்சி முகாமை ஒருங்கிணைப்பு செய்தனர். இந்த பயிற்சிகள் வாயிலாக தென்னை நார் தொழில் நிறுவனங்கள் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் உற்பத்தி, உள்ளூர் மற்றும் வெளியூர் சந்தை வாய்ப்புகள், ஏற்றுமதி வாய்ப்புகள், புதிய தொழில் நுட்பங்கள் போன்ற அறிவு சார் வளர்ச்சி வாய்ப்புகளை பெற்று வருகின்றனர்.

தமிழ்நாடு கயிறு வணிக மேம்பாட்டு நிறுவனத்தால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்திறனை அதிகரித்தல் மற்றும் துரிதப்படுத்துதல் திட்டத்தின் கீழ் தொடர்ந்து பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.




