இந்தியா – பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் சீனாவில் தயாரிக்கப்பட்ட டிரோன் ஒன்று சந்தேகத்திற்கிடமாக பறந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் ட்ரோன் ஒன்று வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணி அளவில் பறந்தது. பெரோஸ்பூர் செக்டர் வான் எல்லையில் பறந்த சீனாவின் தயாரிப்பான அந்த ட்ரோனை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுட்டு வீழ்த்தி உள்ளனர்.
இது குறித்து பாதுகாப்பு படை வட்டாரங்கள் கூறியதாவது, “வெள்ளிக்கிழமை இரவு 11.10 மணியளவில் ஃபெரோசேபூர் செக்டாரின் அருகே வன் என்ற எல்லை நிலை உள்ளது. சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள இந்தப்பகுதியில் இருந்து வெறும் 100 மீட்டர் தொலைவில் கருப்பு நிறத்தில் டிரோன் ஒன்று பறந்தது.
இதைக் கவனித்த பாதுகாப்பு படை வீரர்கள் டிரோனை சுட்டு வீழ்த்தினர். சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன் சீனாவில் தயாரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டது. உளவு பார்க்கும் நோக்கத்தில் டிரோன் பறக்க விடப்பட்டதா? என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாக தெரிகிறது.
கருப்பு நிறம் கொண்ட அந்த ட்ரோன் சர்வதேச எல்லையில் இருந்து 300 மீட்டர் தூரம் முன்னேறி, எல்லை வேலியில் இருந்து 150 மீட்டர் தொலைவில் சந்தேகப்படும் வகையில் பறந்ததால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக பி.எஸ்.எப். தெரிவித்துள்ளது.
நான்கு பேட்டரிகள் மூலம் இயக்கப்படும் இந்த ட்ரோன், 23 கிலோ எடை கொண்டது. சுமார் 10 கிலோ எடையுள்ள பொருட்களை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது. எனினும், எல்லை தாண்டி வந்தபோது அந்த ட்ரோனில் போதைப்பொருள், ஆயுதங்கள், வெடிமருந்துகள் போன்ற எந்த பொருளும் அனுப்பப்படவில்லை.