செஸ் தொடரின் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்தவர் செஸ் கிராண்ட் மாஸ்டரான பிரக்ஞானந்தா. இன்று தன் குடும்பத்தினருடன் சென்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துபெற்றுள்ளார்.
16 வயது இளைஞனான பிரக்ஞானந்தா சென்னையை சேர்ந்தவர். இவர் கடந்த 2018 ஆண்டு கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்றார். இதையடுத்து கடந்த பிப்ரவரி மற்றும் மே மாதம் நடைபெற்ற சர்வதேச அளவிலான செஸ் தொடரில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி சாதனை படைத்த இவருக்கு பல்வேறு பிரபலங்கள் பாராட்டுக்களை தெரிவித்தனர். இளம் வயதிலேயே பல்வேறு சாதனைகளை படத்து வரும் பிரக்ஞானந்தா, அடுத்ததாக வருகிற ஜூலை 28-ம் தேதி மாமல்லபுரத்தில் தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரில் இந்தியா சார்பில் பங்கேற்க இருக்கிறார். இதிலும் அவர் வெற்றிபெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிரக்ஞானந்தா இன்று தன் குடும்பத்தினருடன் சென்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்துபெற்றுள்ளார். பிரக்ஞானந்தாவை வியந்து பாராட்டிய ரஜினி, அடுத்ததாக நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் தொடரிலும் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்தினார். அதுமட்டுமின்றி பிரக்ஞானந்தாவிற்கு செஸ் போர்ட் ஒன்றையும், ராகவேந்திரரின் புகைப்படம் ஒன்றைவும் பரிசாக வழங்கினார் ரஜினி. இதுகுறித்து பிரக்ஞானந்தா தன் ட்விட்டரில் பக்கத்தில் ரஜினியை பற்றி பெருமையாக பேசி, இந்த நாள் மறக்கவே முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.