• Wed. Apr 23rd, 2025

ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தேரோட்டம்

ByAnandakumar

Apr 11, 2025

கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நடந்த தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா திருவிழா மிகவும் விமர்சியாக நடைபெற்று வருகிறது. நாள்தோறும் காலை, மாலை நேரங்களில் சுவாமி திருவீதி உலாவும், கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் வெகு விமர்சையாக இன்று நடைபெற்றது. முன்னதாக கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரனாகி, கணபதி, பாலமுருகன், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட சுவாமிகளுக்கு பல்வேறு நறுமணப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து கல்யாண பசுபதீஸ்வரர் சிறப்பு அலங்காரத்தில் கோவில் இருந்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். பின்னர் தேரை திரண்டிருந்த பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்.

தேர் கோவிலை சுற்றி உள்ள நான்கு மட வீதிகளிலும் சுற்றி வந்தது. அப்போது ஒவ்வொரு வீதிகளிலும் கூடி நின்ற பக்தர்கள் தேரின் முன்பு நின்று சுவாமிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

மேலும், பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே அன்னதானமும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.