கோவை ராஜவீதி பகுதியைச் சேர்ந்த விஷ்ணு என்பவர் ஆர்.வி நகைக் கடை என்ற பெயரில் ராஜவீதி மற்றும் பெரிய கடை வீதியில் நகைக் கடைகள் நடத்தி வருகிறார். இந்நிலையில் ராஜ வீதியில் உள்ள கடைக்கு நேற்று காலை வந்த மர்ம நபர் பத்து சவரன் தங்க சங்கிலி கேட்டு உள்ளார். டிசைன்களைப் பார்த்த அந்த நபர் திடீரென ஒரு தங்க சங்கிலியை மட்டும் கீழே போட்டு, அனைவரும் இருந்ததால் அதை எடுத்துக் கொடுத்து உள்ளார். பிறகு டிசைன் சரியில்லை என மற்ற கடைகளுக்கு சென்ற அந்த நபர், நேற்று மாலை நகை கடை உரிமையாளர் விஷ்ணு வீட்டுக்கு மதிய உணவுக்கு சென்ற பின் வந்து உள்ளார். அப்போது கடையில் விஷ்ணுவின் தந்தை இருந்த நிலையில், தான் காலையில் பார்த்து விட்டு சென்ற அதே தங்க சங்கிலி வேண்டும் எனவும் மற்ற கடைகளில் அது போன்ற டிசைன் கிடைக்கவில்லை எனவும் கூறி உள்ளார். இதனை நம்பிய விஷ்ணுவின் தந்தை அந்த நகையை எடுப்பதற்கு நகர்ந்து உள்ளார். விஷ்ணுவின் தந்தை நகர்ந்ததும் அந்த நபர் கண நேரத்தில் கடையில் வைத்து இருந்த, பத்து சவரன் தங்க சங்கிலியை திருடிவிட்டு, நகை வேண்டாம் என கூறிவிட்டு தப்பினார். சந்தேகம் அடைந்த விஷ்ணுவின் தந்தை நகைகளை சரிபார்த்த போது 83 கிராம் கொண்ட தங்க சங்கிலி மாயமானது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஷ்ணுவின் தந்தை தனது மகனுக்கு தெரிவித்த நிலையில், கடைக்கு வந்த விஷ்ணு சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்து, இது தொடர்பாக பெரிய கடை வீதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து உள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கடையில் முதியவரின் கவனத்தை திசை திருப்பி பத்து சவரன் தங்க சங்கிலியை மர்ம நபர் திருடி செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளன.
மேலும், பல்வேறு கடைகளில் திருட முயன்ற அந்த நபர் குடிபோதையில் இருந்ததாகவும், அதன் காரணமாக மாஸ்க் அணிந்து இருந்ததாகவும் நகை கடை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர். மேலும், அந்த சி.சி.டி.வி கட்சியில் தேதி, நேரம் அமைப்புகள் சரி செய்யாததால் கடந்த 2023 ஆம் ஆண்டு தேதியை காட்டுவதாக தெரிவித்தார்.