• Fri. Apr 26th, 2024

“கருணாநிதி வழியிலிருந்து விலகி திமுக செயல்படலாமா?” பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி

பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் மசோதா குறித்து பேசுகையில்கருணாநிதி வழியிலிருந்து விலகி திமுக செயல்படலாமா?” பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை முதல்வருக்கு வழங்கும் மசோதாவை நிறைவேற்றியபோது சட்டமன்றத்தில் உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, “வேந்தராக முதல்வர் இருந்தால் என்ன தவறு என்று ஜெயலலிதா சொன்னதைக்கூட கேட்காமல், அதிமுகவினர் செயல்படுகின்றனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.இதற்கு பதிலளித்து பாஜகவின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி திமுகவுக்கு சில கேள்விகளை முன்வைத்துள்ளார்.
ஜெயலலிதா அந்த சட்டத்தை கொண்டுவந்தபோது அதை அப்போதைய திமுக தலைவர் கருணாநிதி எதிர்த்தார் என்று குறிப்பிட்டுள்ளார் நாராயணன், “கருணாநிதி வழியிலிருந்து விலகி திமுக செயல்படலாமா?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுபற்றிய அவரது அறிக்கையில், “1994 ஜனவரி 5ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் அப்போதிருந்த 13 பல்கலைக்கழகங்களின் வேந்தர் பொறுப்பு, ஆளுநரிடம் இருந்ததை மாற்றி முதல்வர்தான் அந்த பல்கலைக்கழகங்களின் வேந்தர் என்று சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றினர்.மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அந்தக் காலத்தில் முதல்வர் இருக்க மாட்டாரே, அப்போது யார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருப்பார்கள் என்ற கேள்வியும் அரசியல் வட்டாரத்தில் கேட்கப்பட்டது.தமிழக சட்டப்பேரவையில், தி.மு.கழகத்தின் சார்பில் அந்தச் சட்டம் தேவையற்றது என்ற கருத்து தெரிவிக்கப்பட்டது” என்று திமுகவின் முன்னாள் தலைவர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். (ஆதாரம் : நெஞ்சுக்கு நீதி, நான்காம் பாகம், பக்கம் 512)
மேலும், 30, ஜூலை 1996ஆம் ஆண்டு அன்று தமிழக சட்டசபையில், அன்றைய கல்வித் துறை அமைச்சரும், திமுகவின் நீண்ட கால பொதுச்செயலாளருமான பேராசிரியர் அன்பழகன் அதிமுக கொண்டுவந்த சட்டத்தைத் திரும்ப பெற்றதோடு, ஆளுநரே இனி வேந்தராக தொடருவார் என்றும், முதலமைச்சர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஜெயலலிதா சொன்னதை கேட்காமல் செயல்படுவது சரியா என்று கேட்கும் அமைச்சர் பொன்முடி அவர்கள் திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் ‘தேவையற்ற சட்டம்’ என்று சொன்னதை மீறி சட்டம் கொண்டு வந்துள்ளது நியாயமா? நீதியா? என்பதை விளக்க வேண்டும்.
மேலும், மாநிலத்தில், குடியரசு தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டால் அந்தக் காலத்தில் வேந்தர் இருக்க மாட்டாரே, அப்போது யார் வேந்தராக இருப்பார்கள்? மாணவர்களின் எதிர்கால நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறீர்களே? என்று, இன்று கருணாநிதி அவர்கள் இருந்திருந்தால் கேட்டிருப்பார் அல்லவா என்ற சிந்தனையில்லாமல் அமைச்சர் பொன்முடி அவர்கள் பேசியிருப்பது சரியா என்று முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அதேபோல், முதலமைச்சர் வேந்தரானால் பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி அதிகாரம் கேள்விக்குறியாகி விடும் என்பதோடு, பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கு குந்தகம் விளைவிக்கும் என்ற அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களின் தலைமையிலான தி மு க அரசின் முடிவிற்கு எதிராக ஒரு சட்டத்தை கொண்டு வருவது நியாயமா? நீதியா? இது தான் முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களை பின்பற்றும் ஆட்சியா என்று மக்கள் கேட்பார்கள் என்பதை மு.க.ஸ்டாலின் உணர வேண்டும்.
நிறைவேற்றப்பட்ட மசோதாவை, மறைந்த முதல்வர் மு.கருணாநிதியின் விருப்பத்திற்கேற்ப நம் முதல்வர் அவர்கள் திரும்ப பெறுவார் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார் நாராயணன் திருப்பதி‌.அதிமுகவினரை நோக்கி திமுக கேட்ட கேள்விக்கு பாஜக பதில் அளித்திருப்பது அரசியல் அரங்கில் நோக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *