குவைத் உட்பட வளைகுடா நாடுகளில் கடந்த பிப்ரவரி-28 முதல் தொடங்கிய பதட்டமான சூழல் காரணமாக விமான சேவைகள் தடைபட்டதால் மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். மேலும் பல்வேறு காரணங்களால் உயிரிழந்த இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த தொழிலாளர்கள் உடல்கள் தாயகம் அனுப்பி வைக்க முடியாத நிலைமை முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இப்படியிருக்க இன்று(19/03/26) வியாழக்கிழமை மதியம் குவைத்திலிருந்து டெல்லிக்கு புறப்பட்ட குவைத் ஏர்வேஸின் கார்கோ விமானத்தில் கடந்த இரண்டு வாரங்களில் இடைப்பட்ட தினங்களில் மாரடைப்பு உள்ளிட்ட சில காரணங்களால் உயிரிழந்த 14 இந்தியர்கள் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
டெல்லிக்கு செல்லும் 14 இந்தியர்களின் உடல்களில் 5 பேர் உடல்கள் சென்னைக்கும், கேரளாவின் கொச்சிக்கு 2 உடல்கள், மும்பைக்கு ஒரு உடல், ஹைதராபாத்துக்கு ஒரு உடலும், லக்னோவுக்கு ஒரு உடல் என்று சொந்த ஊர்களுக்கு அனைத்து உடல்களும் அனுப்பி வைக்கப்படும். சென்னைக்கு செல்லும் 5 உடல்களில் ஒருவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது குறிப்படத்தக்கது.
மேலும் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட 5 இந்தியர்களின் உடல்களுக்கான அனைத்து ஆவணப்பணிகளையும் குவைத் சமூக சேவகரும் மற்றும் குவைத் இந்திய தூதரக பிரதிநிதியுமான அலிபாய் அவர்கள் செய்து முடித்தார். இவர் குவைத்திலுள்ள மக்கள் சேவை மையத்திலும் இணைந்து செயல்பட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் இந்த சேவையில் பல ஆண்டு காலமாக செய்து வருகிறார். இதுவரை கிட்டத்தட்ட 700 மேல் உடல்களை இந்தியாவுக்கு அனுப்பி வைத்துள்ளார் இவருடைய சேவையை அனைவரும் பாராட்டுகின்றனர். குவைத்திலுள்ள மற்ற இதர இந்திய அமைப்புகளின் சார்பாக மற்ற 9 இந்தியர்களின் உடல்களும் இத்துடன் தாயகம் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பதட்டமான சூழ்நிலையிலும் இந்திய தூதரகத்தின் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகள் அனைத்தும் துரிதமாக நிறைவு செய்யப்பட்டது.



