கோவை மாவட்டத்தில் உருவாகும் நொய்யல் ஆற்றில் அதிகப்படியான தொழிற்சாலை கழிவுகள் கலக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. பல்வேறு தனியார் தொழிற்சாலைகள் கழிவுகளை நொய்யல் ஆற்றில் விடுவதால் நீரின் தன்மை மாறுவதாக பல்வேறு இயற்கை ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள், கட்சியினர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியினர் “Let’s Make Coimbatore Sweet Again” என்ற முன்னெடுப்பை முன்னெடுத்துள்ளனர். நொய்யல் ஆற்றின் மாதிரிகளை ஆய்வகத்தில் சோதனை செய்ததில் அதில் அதிகப்படியான நச்சுத்தன்மை கலந்திருப்பதாகவும் அதற்கு தனியார் தொழிற்சாலைகள் மட்டும் காரணம் அல்ல மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சி நிர்வாகமும் அன்றாடம் பயன்படுத்தப்பட்டு வரும் வீட்டு கழிவுகள் அரசு மருத்துவமனை கழிவுகள் மாநகராட்சி பகுதிகளில் சேகரமாகும் திரவ கழிவுகளையும் அதில் விடுவது ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாக கூறி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து பேட்டி அளித்த பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர் அசோக்ஸ்ரீநிதி, அரசாங்கமே சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை நொய்யல் ஆற்றின் கலப்பதாக குற்றம் சாட்டினார். வெறும் கோவை அரசு மருத்துவமனை கழிவுகளும் ஆற்றில் விடப்படுவதாகவும் இதனால் நொய்யல் ஆறு மிகவும் மோசம் அடைந்து வருவதாக தெரிவித்தார். இதன் காரணமாக பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்த அவர் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

புதிதாக முதல்வராக பொறுப்பேற்றுள்ள விஜய், முதல் கட்டமாக 700 க்கும் மேற்பட்ட மதுபான கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டு உள்ளார் அதைவிட முக்கியமானது இந்த நீர் பிரச்சனை என்று தெரிவித்தார். மது அருந்துபவர்கள் விலை கொடுத்து வாங்கி மது அருந்தி உயிரிழக்கின்றனர் ஆனால் சாதாரண மக்கள் தினம்தோறும் குடிநீர் என்று விஷத்தை குடித்து வருகின்றனர் என்று தெரிவித்தார். மேலும் கோவையில் சூயஸ் திட்டம் பல கோடி செலவில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர் உள்ளூர் பொறியாளர்களை அவர்களது கண்ணுக்கு தெரியவில்லையா என்று கேள்வி எழுப்பினார். வேங்கை வயலுக்கு ஒரு நியாயம் இதற்கு ஒரு நியாயம் என்று இருக்கக் கூடாது என்று தெரிவித்த அவர் அரசாங்கமே கழிவு நீரை ஆற்றில் கலக்கலாமா? என்று கேள்வி எழுப்பி அரசு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.




