• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பாஜக மாமன்ற உறுப்பினர் அடிக்க பாய்ந்ததால் பரபரப்பு….

ByK Kaliraj

Mar 18, 2025

சிவகாசி மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மாநகராட்சி அவசரக் கூட்டம் மேயர் சங்கீதாஇன்பம் தலைமையில், துணை மேயர் விக்னேஷ்பிரியா, ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலையில், அனைத்து கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களும், மாநகராட்சி அலுவலர்களும் கலந்து கொள்ள நடைபெற்றது. கூட்டத்தில் கடந்த 11-ம் தேதி நடத்தப்பட்ட சாதாரண கூட்டத்தின்98 – தீர்மானங்களும் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. கூட்டம் தொடங்கியவுடன், கடந்த மாமன்ற கூட்டத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் அவமதிக்கப்பட்டதாக பாஜக மாமன்ற உறுப்பினர் குமரி பாஸ்கரன் பதாகையை கையிலேந்தி எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது, அருகிலிருந்த காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ரவிசங்கர் கடந்த கூட்டத்தில் தேசிய கீதம் பாடப்படாமல் அவமதிக்கப்படவில்லை அப்போது நடந்த பிரச்சினையே வேறு என்று சொல்லியபடி பாஸ்கரன் கையி லேந்தியிருந்த பதாகையை பிடுங்கினார். இதனால் ஆத்திரமடைந்த பாஜக உறுப்பினர் பாஸ்கரன்,காங்கிரஸ் உறுப்பினர் ரவிசங்கரை அடிக்க பாய்ந்ததால் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து பாஜக உறுப்பினரின் செயல்பாடுக்கு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டதால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது.

உறுப்பினர்களை மேயர், ஆணையாளர் சமாதானப்படுத்திய பின்பாக கூட்டம் தொடர்ந்து நடந்த நிலையில், அதிமுகவில் வெற்றி பெற்று திமுகவில் இணைந்த மாமன்ற உறுப்பினர் ஸ்ரீநிகா பேச முற்பட்டபோது திமுக உறுப்பினர் ஜெயின்லாபுதீன் குறுக்கிட்டு பேசியதால், மேயர் ஆதரவு தரப்பு உறுப்பினர்களுக்கும், மேயருக்கு எதிர்ப்பு தரப்பிலுள்ள உறுப்பினர்களுக்குமிடையே ஒருவருக்கொருவர் ஒருமையில் மரியாதையின்றி பேசி வாக்குவாதம் நடந்து கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் திமுக உறுப்பினர் ஜெயினுலாபுதீன் ஆவேசமாக நாற்காலியை தள்ளி விட்டதில் கூட்டத்தில் மீண்டும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

அதனைத் தொடர்ந்து மீண்டும் அனைவரையும் சமாதானப்படுத்தி கூட்டம் நடத்தியதை யடுத்து கூட்டத்தின் பாதியிலேயே 98- தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக மேயர் அறிவித்ததால், காரசாரமாக பேசி, ஒருவருக்கொருவர் அடிக்க பாய்ந்து, கூச்சலும்- குழப்ப முமாக நடந்த மாமன்ற கூட்டம் தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.

மாமன்ற கூட்டத்தில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் ரவி சங்கரை அடிக்க பாய்ந்த பாஜக மாமன்ற உறுப்பினர் குமரி பாஸ்கரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் வைத்து காங்கிரஸ் கட்சியினர் சூழ்ந்து தாக்கம் முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் அவரை பாதுகாப்பாக இரு சக்கர வாகனத்தில் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவியதால்
மாநகராட்சி அலுவலக வளாகத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

இதற்கிடையே பாஜக உறுப்பினரும், அதிமுக மாமன்ற உறுப்பினராக வெற்றி பெற்று திமுகவில் இணைந்துள்ள மாமன்ற உறுப்பினர்களும், மற்றுமுள்ள சில உறுப்பினர்களும் மாநகராட்சி கூட்டத்தின் மரபுகளை மீறி செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டிய காங்கிரஸ் உறுப்பினர், சிவகாசி மாநகராட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தமிழக முதல்வர் ஸ்டாலின் தீர்த்து வைக்க முன் வர வேண்டுமென்று கோரிக்கை விடுத்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஸ்கரன் மீது புகார் தெரிவித்துள்ளார்.