ஈரோடு இடைத்தேர்தல் அதிமுக இபிஎஸ் அணி சார்பாக திறக்கப்பட்ட தேர்தல் அலுவலகம், பேனரில்கூட்டணியின் பெயரை மாற்றியதால் பாஜக கலக்கத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஈரோடு தேர்தலில்இபிஎஸ் அணி ஓபிஎஸ் அணி என அதிமுகவினர் இருபிரிவாக வேட்பாளர்களை நிறுத்தி போட்டியிடுகிறது. இதில் யாருக்கு தன் ஆதரவு என தெரிவிக்கமல் பாஜக உள்ளது. இந்நிலையில் பா.ஜனதாவின் முடிவுக்கு காத்திராமல் வேட்பாளர் அறிவிப்பு, பணிமனை திறப்பு என்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் சென்றனர். தேர்தல் பணிமனையில் வைக்கப்பட்ட பேனரில் அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி என்று அறிவிப்பு இருந்தது. அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி என்று தான் பெயர். கூடுதலாக முற்போக்கு' என்ற வார்த்தையை இணைத்து பேனர் வைக்கப்பட்டது. வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பு வரை பிரதமர் மோடி படம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில் தான் பேனர் வைக்கப்பட்டிருந்தது. நேற்று தான் அதிரடியாக மோடி படம் இல்லாமல் கூட்டணி பெயரையும் மாற்றி புதிய பேனர் வைக்கப்பட்டது. எடப்பாடி பழனிசாமி கொடுத்த இந்த அதிர்ச்சி வைத்தியத்தால் பா.ஜனதா கலங்கிப்போய் விட்டது. தகவல் அறிந்ததும் பா. ஜனதா தலைவர் அண்ணாமலை அ.தி.மு.க. மேலிட தலைவர்களுடன் போனில் பேசி இருக்கிறார். அப்போது தனது அதிருப்தியை வெளியிட்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து நேற்று மாலையில் அந்த பேனரில் முற்போக்கு என்பது கருப்பு ஸ்டிக்கரால் மறைக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி என்று இடம்பெற்று இருந்தது. பின்னர் இரவோடு இரவாக புதிய பேனர் தயார் செய்து வைக்கப்பட்டது. அதிலும் மோடி படம் இடம் பெறவில்லை. தேசிய ஜனநாயக கூட்டணி என்பதற்கு பதிலாக
அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி என்ற பெயர் மட்டுமே இடம்பெற்றுள்ளது. ஆகமொத்தத்தில் 1 நாளில் இபிஎஸ் கூட்டணியின் பெயரை 3முறை மாற்றிஉள்ளார்.