உக்ரைன் நாட்டில் நடைபெறும் போர் நிறுத்தப்பெற்று அங்கு அமைதி வேண்டி சென்னை பரத்வாஜ் ஸ்வாமிகள், திருப்பரங்குன்றம் மலையில் கடும் வெயிலில் பிரார்த்தனை செய்தார்.
சென்னை யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் இன்று திருப்பரங்குன்றம் மலையில் கடும் வெயிலில் சுடும் பாறையில் உக்ரைன் நாட்டில் நடைபெறும் ரஷ்யாவிற்கு எதிரான போர் நிறுத்தம் உண்டாகவும், சமாதானம் அடையவும் உயிர் சேதம் அடையாமல் இருக்கவும் உலக அமைதிக்காகவும் சிறப்பு பிரார்த்தனை செய்தார்.
குறிப்பாக தமிழ்நாட்டில் நீர்நிலைகள் நிறைந்து ஓடவும், பயிர் பச்சைகள் சிறந்து விளங்கவும் கொரோனா போன்ற வைரஸ் நோயின் தாக்கத்தில் இருந்து இந்தியா விடுபடவும் வராகி அம்பாளை இதயத்தில் வைத்துக்கொண்டு கடுமையான விரதம் இருந்தார்.
மேலும் மஞ்சள் நீரில் நீராடி விபூதி ஸ்நானம் செய்து அம்பாளின் உத்தரவுப்படி தகிக்கும் வெயிலில் இரண்டு மணி நேரம் வராகி அம்பாளின் மூல மந்திரத்தை ருத்ராட்ச மாலையை வைத்துக்கொண்டு ஜெபித்து பக்தர்களுக்காக வேண்டி தவம் நடத்தினார்.
திருப்பரங்குன்றம் மலையில் கடும் வெயிலில் பரத்வாஜ் சுவாமிகள் தவம் செய்ததை பார்த்து பொதுமக்கள் பக்தி பரவசம் அடைந்தனர். அங்கு வந்த பக்தர்களுக்கு சுவாமிகள் பிரசாதம் வழங்கினார்.