சேலத்தில் மராட்டிய சமூகத்தினர் ஞானேஸ்வரர் மற்றும் பகவத் கீதையை பல்லக்கில் சுமந்து பாரம்பரிய நடனமாடி 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர்.
மராட்டியத்தில் பகவத் கீதையை எழுதிய பாண்டுரங்கரின் பக்தர் ஞானேஸ்வரரை விஷ்ணுவின் அவதாரமாக மராட்டிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் சென்னை குடியாத்தம் சேலம் உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் மராட்டிய மக்கள் ஞானேஸ்வரரை வழிபடும் வகையில் அவர் எழுதிய பகவத் கீதையை ஏழு நாட்கள் தொடர்ந்து படித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள மராட்டிய சமூகத்தினர் மற்றும் கோவை மதுரை அரியலூர் திருப்பத்தூர் திருச்செங்கோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் மராட்டிய மக்கள் ஒன்பதாவது ஆண்டாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இல் இருந்து தொடர்ந்து ஏழு நாட்கள் ஞானேஸ்வரருக்கு பூஜைகள் செய்து பகவத் கீதையை ஏழு நாட்கள் படித்து, தொடர் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடைசி நாளான இன்று ஞானேஸ்வரரின் சிலை மற்றும் பகவத் கீதையை பல்லக்கில் வைத்து ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். செவ்வாப்பேட்டை பாண்டுரங்கன் கோயிலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலம், மாணிக்கம் பிள்ளை தெரு, அச்சு ராமன் தெரு, கன்னார் தெரு வழியாகச் சென்று மீண்டும் பாண்டுரங்கன் கோவில் பகுதியில் முடிவடைந்தது. இந்த ஊர்வலத்தில் 500க்கும் மேற்பட்ட குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்கள் மராட்டிய சமூகத்தின் பாரம்பரிய நடனங்கள் ஆடியும், பகவத்கீதையை பாடியும் ஊர்வலமாகச் சென்றது பொது மக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது.