

கீழடியில் தமிழக முதல்வர் தமிழர்களின் நகர நாகரிகத்தை உலகிற்கு எடுத்துரைத்த கீழடி அகழாய்வு நடைபெற்ற தளங்களை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார்.
கீழடியில் ஏழாவது அகழாய்வு பணி நிறைவுற்ற நிலையில் அதனை ஆவணப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில் அகழாய்வு பணிகள் நடைபெற்ற பகுதியில் முதல்வர் மு க ஸ்டாலின் பார்வையிட்டார்.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ம் ஆண்டு வரை மத்திய தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணியும், அதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நான்கு கட்ட அகழாய்வுப் பணிகளை தமிழக தொல்லியல் துறை மேற்கொண்டது. முதல் 5 கட்ட அகழாய்வுப் பணிகள் கீழடி கிராமத்தில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில் 6 கட்ட அகழாய்வு பணி சற்று விரிவாக்கம் செய்யப்பட்டு கீழடி அடுத்துள்ள கொந்தகை , அகரம் , மணலூர் ஆகிய பகுதிகளில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் கொந்தகை பகுதியில் நடைபெற்ற அகழாய்வு பணியில் ஏராளமான முதுமக்கள் தாழிகளும், மனித எலும்புக் கூடுகளும் கண்டறியப்பட்டது. அதேபோல் அகரம் பகுதியில் நடைபெற்ற அகழாய்வு பணியில் நமது முன்னோர்கள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கினார்கள் என்பதற்கு எடுத்துகாட்டாக 20 க்கும் மேற்பட்ட அடுக்குகளாலான உறைகிணறு கண்டறியப்பட்டது.
கீழடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வு பணியில் இதுவரை 100 க்கும் மேற்பட்ட குழிகள் தோண்டப்பட்டு தங்க ஆபரணங்கள், எடைக்கற்கள், நாணயங்கள், சூது பவள பாசி, மணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருட்கள், சுடுமண்ணால் செய்யப்பட்ட பானைகள், மண் குவளைகள் உள்ளிட்ட 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 12.21 கோடி திட்ட மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்ட அருங்காட்சிய பணி நிறைவுறும் நிலையில் உள்ளது. தமிழக தொல்லியல் வரலாற்றில் அகழாய்வு தளத்தை நேரில் பார்வையிடும் முதல் முதலமைச்சர் என்ற பெருமைக்குரியவராக மு.க.ஸ்டாலின். இந்த இடத்தை பார்வையிட்டு தொல்லியல் துறை அதிகாரிகளிடம் அகழாய்வு குறித்து கேட்டறிந்தார்.
கீழடி அகழாய்வு தளத்தின் எதிரில் அமைக்க பட்ட அரங்கில் 7ம் கட்ட அகழாய்வில் கிடைக்க பெற்ற பொருட்களை காட்சி படுத்தபட்டதை ஆர்வத்துடன் முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார். அவரோடு அமைச்சர்கள் ஐ.பெரியசாமி தங்கம் தென்னரசு KR. பெரியகருப்பன் KKSSR ராமச்சந்திரன், அன்பில் மகேஸ், அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டவர்களும் பங்கேற்றனர்.
