வரும் ஜூலை 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஒன்றிய அரசு தடை விதித்துள்ளது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
பருவநிலை மாற்றத்திற்கு மிகப்பெரிய அளவில் பிளாஸ்டிக் பொருட்கள் தீங்காக உள்ளது. இந்நிலையில், ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2021, ஆகஸ்ட் மாதம் ஒன்றிய அரசால் அடையாளம் காணப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை ஜூலை 1ம் தேதி முதல் உற்பத்தி, இறக்குமதி, சேமிப்பு, விநியோகம், விற்பனை மற்றும் பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறதுஉதாரணமாக, பிளாஸ்டிக்காலான காது குடையும் குச்சி, பிளாஸ்டிக் கொடிகள், ஐஸ் கிரீம் கப்புகள், ஸ்ட்ரா, ஸ்பூன், பத்திரிகைகள், சிகரெட் அட்டைகள், 100 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் மற்றும் பிவிசி பேனர்கள் ஆகியவையும் இந்த தடையில் அடங்கும்.
இந்த உத்தரவு வரும் ஜூலை 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஜூன் 30ம் தேதிக்குள் இந்த பொருட்களை வணிகர்கள், சிறு கடைகள், ஷாப்பிங் மால்கள், சினிமா அரங்கு விற்பனை கூடங்கள் என அனைத்திலும் காலி செய்து விட வேண்டும். இவற்றை கையிருப்பு வைத்திருந்தாலோ, வினியோகம் செய்தாலோ சம்பந்தப்பட்ட இடம் சீல் வைக்கப்பட்டு, உரிய அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.