காதலித்து திருமணம் செய்த கண்பார்வையற்ற தம்பதியருக்கு, திருப்பூரில் ஆம்புலன்ஸில் பிறந்த ஆண் குழந்தை.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அறிவொளிநகரை சேர்ந்தவர் மாணிக்கம் (37). ஊதுபத்தி வியாபாரி. இவரது மனைவி ரோகிணி (28). தம்பதியர் இருவரும் கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள். கண்பார்வையற்ற நிலையில், அவ்வப்போது சந்தித்து பேசி வந்த நிலையில் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் ரோகிணி கர்ப்பம் தரித்தார். நிறைமாத கர்ப்பிணியமான அவருக்கு இன்று மதியம் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
உடனே கணவர் மாணிக்கம், 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ஆம்புலன்சில் ஓட்டுநர் சதீஷ்குமார் மற்றும் மருத்துவ உதவியாளர் ஈஸ்வரி ஆகியோர் சென்றனர். தொடர்ந்து ரோகிணியை, திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் பழவஞ்சிபாளையம் பகுதியில் வந்த போது, அவருக்கு வலி அதிகமாக ஏற்பட்டதால் ஆம்புலன்சிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாயும், சேயும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு தொடர்ந்து நல்ல நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.