திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து வருகிறது. குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் செய்யப்பட்டுள்ளன.
அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு பம்பரமாக சுழன்று இந்து சமய அறநிலையத் துறைக்கு தேவையான திட்டங்களை முதல்வரிடம் கலந்தாலோசித்து வழங்கிவருகிறார்.
அந்த வகையில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர், தமிழில் அர்ச்சனை ,அர்ச்சகர் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக தமிழகத்தில் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு மாதம் தோறும் ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மாத வருவாய் இன்றி பணியாற்றி வந்த நிலையில் ஒரு கால பூஜை திட்டத்தில் கீழ் 12 ஆயிரத்து 959 திருக்கோவில்களின் பணிபுரிவோருக்கு மாத தொகையாக ரூபாய் 1000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் அர்ச்சகர் பயிற்சி பெறுவோருக்கான ஊக்கத்தொகை உயர்த்துவதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். அர்ச்சகர் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாயாக இருந்த ஊக்கத்தொகை தற்போது 3 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். ஏற்கவே அர்ச்சகர் பயிற்சி பெறுவோருக்கு விடுதி, உணவு அனைத்தும் இலவசமாக அளிக்கப்படும் நிலையில் ஊக்கத்தொகை உயர்வும் பெரும் வரவேற்பை பெற்றள்ளது.