கோவையில் நடைபெற்ற உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் 11 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழாவில், உடலியல் நடைமுறைக் கையேட்டு நூலை உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி வெளியிட்டார்.
தமிழ் மொழியின் சிறப்புகளை கூறும் விதமாக தமிழ் அறிஞர்களை கவுரவிக்கும் விதமாகவும், கோவையில் ஒவ்வொரு ஆண்டும் உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின்
சார்பாக விழா நடைபெற்று வருகின்றது.
இதன் தொடர்ச்சியாக உலகத் தமிழ் பண்பாட்டு மையத்தின் 11 ஆம் ஆண்டு விருது வழங்கும் விழா,காளப்பட்டி சாலையில் உள்ள டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரி வளாக கலையரங்கில் நடைபெற்றது.
விழாவில் முன்னதாக ,டாக்டர் என்.ஜி.பி.கல்விக்குழுமங்களின் செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி அனைவரையும் வரவேற்று பேசினார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், மருத்துவர் ரேஷ்மி ராமநாதன் எழுதிய உடலியல் நடைமுறைக் கையேட்டு நூலை உலகத் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின் தலைவர் மருத்துவர் நல்ல பழனிசாமி வெளியிட்டுத் தலைமையுரை ஆற்றினார். விருது பெறுபவர்கள் பற்றி பத்மஸ்ரீ சிற்பி பாலசுப்ரமணியம் அறிமுகவுரையாற்றினார்.
நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக வேலம்மாள் கல்வி அறக்கட்டளையின் தலைவர் .எம்.வீ. முத்துராமலிங்கம் தமிழ் அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினர்களாக முனைவர் ப.மருதநாயகம், முனைவர் தெ.ஞானசுந்தரம். திரு.இயகாகோ என்.சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் பிரபல பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் பாரதி பாஸ்கர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில் எழுத்தாளர் வண்ணதாசன் பெரியசாமித்தூரன் படைப்பாளர் விருதையும், முனைவர் அ.பாண்டுரங்கன் உ.வே.சா.தமிழறிஞர் விருதையும், முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் டாக்டர் நல்ல பழனிசாமி பிறதுறைத் தமிழ்த் தொண்டர் விருதையும் பெற்றனர்.
சிறப்பு விருதுகளாக முனைவர் சொ.சேதுபதி எழுத்தாளர் புன்னகைபூ ஜெயக்குமார். திருமதி சூலூர் ஆனந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் இறுதியாக உலகத் தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் மதியுரைஞர் பெ.இரா.முத்துசாமி நன்றியுரை வழங்கினார்.