• Mon. May 12th, 2025

ஏப்ரல் 18 : ‘இன்று எந்தச் செய்தியும் இல்லை’ என்று செய்தி வாசித்த தினம் இன்று.

Byவிஷா

Apr 18, 2025

ஒரு நாள் செய்தியே இல்லையென்றால் எப்படி இருக்கும்?

நாம் வழக்கமாகக் கேட்கும் ஃ பார்க்கும் ஒரு பிரதான சேனல் ’இன்று எந்த நியூஸ_மே இல்லை’ என்று சொன்னால் எப்படி இருக்கும்? ‘விளையாடாதீங்க பாஸ் அப்படி ஒரு நாள் சாத்தியமே இல்லை. எங்கேயாவது ஏதாவது நடந்துகிட்டேதான இருக்கும்’ என்கிறீர்களா? உண்மையில் அப்படி ஒரு நாள் வந்தது. இப்போது இல்லை.. 1930 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி.

இந்த சம்பவம் நடந்தது லண்டனில்.

24 மணி நேர செய்திச்சேனல்கள், இணையதளங்கள் ஏதும் இல்லாத அந்தக் காலத்தில் மக்கள் செய்தியைத் தெரிந்துகொள்ள இரண்டே வழிகள் தான் இருந்தது. ஒன்று தினசரிகள் மற்றொன்று ரேடியோ. பிபிசி ரேடியோ அப்போது லண்டனில் மிகப் பிரபலம்.

1930 ஆம் ஆண்டுதான் பிபிசிக்கு முக்கியமான காலகட்டம். காரணம், அதுவரை நியூஸ் ஏஜென்சிகளிடம் இருந்து செய்திகளை வாங்கி வெளியிட்டுக் கொண்டிருந்த பிபிசி, புதிதாக ஒரு நியூஸ்ரூம் செட்டப்பை அமைத்து சொந்தமாக செய்தி வெளியிடத் தொடங்கியிருந்தது. பிரிட்டிஷ் அரசாங்கம் மக்களுக்கு தெரிவிக்க விரும்பும் செய்திகள் அத்தனையும் பிபிசி வழியாக வெளியிட்டது. அரசாங்க அறிவிப்புகளை மட்டுமே வெளியிடாமல் செய்தி சேகரிப்பவர்கள் பலரை வேலைக்கு வைத்து தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தது.

1930, ஏப்ரல் 18 ஆம் தேதி, புனித வெள்ளியன்று பிரிட்டிஷ் அரசாங்கம் பற்றிய நியூஸ் ஒன்றைத் தான் அன்றைய மாலை நேரச் செய்தியில் வாசிப்பதற்காகத் தயார் செய்திருந்தனர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் எக்காரணம் கொண்டும் அந்த நியூஸ் மக்களை சென்று சேரக் கூடாது என்று நினைத்தது. அதனால் எல்லாப் பத்திரிக்கைகள் மற்றும் செய்தி நிறுவனங்களையும் தொடர்பு கொண்டு உடனே அந்தச் செய்தி வெளியிடாமல் தடுக்கச் சொல்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தனர்.

புனித வெள்ளி காரணமாக அன்றைக்கு எல்லா பத்திரிக்கைகளும் விடுமுறையில் இருந்தது. ஈஸ்டர் விடுமுறை முடியும் வரை பத்திரிக்கைகள் வெளிவராது என்பதால், பிபிசிக்கு மட்டும் தொடர்பு கொண்டு விஷயத்தை சொன்னார்கள் பிரிட்டிஷ் அதிகாரிகள். துரதிஷ்டவசமாக அன்றைக்கு அந்த நியூஸை விட்டால் பிபிசியிடம் வேறு செய்தி இல்லை.

மாலை 6:30 மணி. செய்திக்காக எல்லோரும் பிபிசி ரேடியோவிற்கு காது கொடுத்து காத்திருக்க, செய்தி வாசிப்பவர் குரல் ஒலிக்கத் தொடங்குகிறது. “Good Evening. Today is Good Friday. There is no news” அவ்வளவு தான். அதற்கு பிறகு செய்தி நேரம் முழுவதும் பியானோ இசை மட்டுமே ஒலித்தது. வரலாற்றில் அந்த நாள் இடம்பிடித்தது.

சரி உண்மையில் அந்த நாளில் வேறெந்த சம்பவமும் நடக்கவில்லையா?

வங்காளதேசத்தில் உள்ள சிட்டகாங் எனும் இடத்தில் புரட்சியாளர்கள் சிலர், பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கை சூறையாடினர். பின்னாட்களில் சிட்டகாங் எழுச்சி என்று வரலாற்றில் இடம்பிடித்த சம்பவம் நிகழ்ந்தது அந்த தினத்தில்தான். ஆனால் அப்போதெல்லாம் Just in, Breaking என உடனுக்குடன் வழங்கும் வழக்கமெல்லாம் இருக்கவில்லை. மேலும் அந்த நிகழ்வை பிபிசி அறிந்திருக்கவில்லை.