• Mon. Jul 6th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

கோவையில் விபத்தில் சிக்கிய நபர் மூளைச்சாவு அடைந்த உடல் உறுப்புகள் தானம்…,

BySeenu

Jul 6, 2026

“கோவையில் சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரின் உடல் உறுப்புகள், அவரது குடும்பத்தினரின் சம்மதத்தோடு தானம் செய்யப்பட்டு உள்ளன. இதன் மூலம் 3 நபர்களுக்குப் புதிய மறுவாழ்வு கிடைத்து உள்ள நெகிழ்ச்சிச் சம்பவம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நெகிழ வைத்து உள்ளது.”

கோவை, கவுண்டம்பாளையம் கோ-ஆப்பரேட்டிவ் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். கடந்த ஜூலை 1-ந் தேதி கவுண்டம்பாளையம் பகுதியில் சென்று கொண்டு இருந்த போது பாலகிருஷ்ணன் சாலை விபத்து ஒன்றில் சிக்கி, தலையில் பலத்த காயம் அடைந்தார். விபத்தில் படுகாயமடைந்த அவரை மீட்ட அப்பகுதி மக்கள், மேல் சிகிச்சைக்காகக் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அனுமதித்தனர்.

அங்கு உள்ள மருத்துவ அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக மூளைச்சாவு அடைந்தார்.

பாலகிருஷ்ணன் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்த அரசு மருத்துவக் குழுவினர், உடல் உறுப்பு தானம் செய்வதன் மூலம் பிற உயிர்களை எப்படிக் காப்பாற்ற முடியும் என்ற விழிப்புணர்வை அவரது உறவினர்களுக்கு எடுத்துரைத்தனர்:
சோகத்தில் மூழ்கியிருந்த நிலையிலும், பாலகிருஷ்ணனின் குடும்பத்தினர் “அவனது உறுப்புகள் பிறருக்குப் பயன்படட்டும்” என பெருந்தன்மையுடன் சம்மதம் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து ‘தமிழ்நாடு உறுப்பு தான வழிகாட்டுதல்’ நெறிமுறைகளின்படி, கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி ஆலோசனை மற்றும் நேரடி மேற்பார்வையின் கீழ் மாற்று அறுவைச் சிகிச்சைக்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டன.

அதில் அரசு மருத்துவமனையின் அசுர நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவ குழுவினர் பாலகிருஷ்ணனின் உடலில் இருந்து உறுப்புகளைப் பிரித்தெடுக்கும் உன்னதப் பணியை மேற்கொண்டனர். பாலகிருஷ்ணனின் உடலில் இருந்து ஒரு சிறுநீரகம் மற்றும் இரு கண்களின் கருவிழிகள் வெற்றிகரமாகத் தானமாகப் பெறப்பட்டன. இவை கோவை அரசு மருத்துவமனையிலேயே சிகிச்சை பெற்று வரும் மாற்று உறுப்புத் தேவைப்படும் நோயாளிகளுக்கு பொருத்தப்பட உள்ளன.

உறுப்பு தான நடைமுறைகள் முடிந்த பின்னர், பாலகிருஷ்ணனின் உடலுக்கு மருத்துவக் கல்லூரி முதல்வர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் மலர் தூவி அலாதி மரியாதை செலுத்தினர். அதன் பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது.