• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

ஜூலை 31 வரை பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்

Byவிஷா

Apr 12, 2025

2026ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகளுக்கு ஜூலை 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பத்ம விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண், பத்மஸ்ரீ ஆகியவை குடிமக்களுக்கான நாட்டின் மிக உயரிய விருதுகளாகும்.. 1954-ம் ஆண்டு முதல் வழங்கப்படும் இந்த விருதுகள் ஆண்டு தோறும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், சிவில் சேவை, வர்த்தகம், தொழில்துறை போன்ற பல்வேறு துறைகளில் புகழ்பெற்ற மற்றும் விதிவிலக்கான சாதனைகள் மற்றும் சேவைகளுக்காக இந்த விருது வழங்கப்படுகிறது. இனம், தொழில், பதவி அல்லது பாலின வேறுபாடின்றி அனைத்து நபர்களும் இந்த விருதுகளைப் பெற தகுதியானவர்கள் ஆவர். மருத்துவர்கள், விஞ்ஞானிகள் தவிர, பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் பத்ம விருதுகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.
பத்ம விருதுகளை மக்களுக்கான விருதுகளாக வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, அனைத்து குடிமக்களும் சுய நியமனம் உட்பட இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகளை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். மகளிர், சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், சமுதாயத்திற்கு தன்னலமற்ற சேவையாற்றுவர்களின் தலைசிறந்த சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்படுகிறது.
பத்ம விருதுகளுக்கான பரிந்துரைகள் தேசிய விருதுகளுக்கான இணையதளத்தில் (https://awards.gov.in) ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் இந்த விவரங்கள் அதிகபட்சமாக 800 வார்த்தைகளுக்குள் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் விவரங்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் (https://mha.gov.in) ‘விருதுகள் மற்றும் பதக்கங்கள்’ என்ற தலைப்பிலும், பத்ம விருதுகளுக்கான இணையதளத்திலும் (https://padmaawards.gov.in) உள்ளன. இவ்விருதுகள் தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிகள் https://padmaawards.gov.in/AboutAwards.aspx என்ற முகவரியில் வெளியிடப்பட்டுள்ளன.