திமுக முன்னாள் அமைச்சரும், மூத்த தலைவருமான கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களின் வீடுகள், அலுவலகங்கள் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சொத்துக் குவிப்பு வழக்கு மற்றும் முறைகேடு புகார்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.
தலைநகர் சென்னையில் உள்ள அடையார் மற்றும் திருவான்மியூர் பகுதிகள், திருச்சி மற்றும் கோவை உள்ளிட்ட 10 இடங்களில் இந்த சோதனை தீவிரமாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக, கோவையில் உள்ள TVH அடுக்குமாடி குடியிருப்பு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த TVH நிறுவனத்தை கே.என்.நேருவின் சகோதரர் மணிவண்ணன் நடத்தி வரும் நிலையில், அங்கு முக்கிய ஆவணங்கள் மற்றும் நிதி பரிவர்த்தனைகள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.அதேபோல, நேருவின் மற்றொரு சகோதரரான ரவிச்சந்திரனுக்குச் சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையை விரிவுபடுத்தியுள்ளது.

காலை முதலே தொடரும் இந்த சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சோதனை நிறைவடையும் போது கூடுதல் விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.








