• Fri. May 3rd, 2024

அங்காரகன் திரை விமர்சனம்..!

Byஜெ.துரை

Sep 8, 2023

ஸ்ரீபதி தயாரிப்பில் மோகன் தச்சு இயக்கி சத்யராஜ் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் “அங்காரகன்”. இத்திரைப்படத்தில் நீயா, அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரீனா கரட், அங்காடி தெரு மகேஷ் உட்பட மற்றும் பலர் நடித்துள்ளனர்.

குறிஞ்சி மலை வனப்பகுதியில் இருக்கும் ரிசார்ட்டில் தம்பதியான நாயகன் (ஸ்ரீபதி) நாயகி(நீயா) மற்றும் பல விருந்தினர்கள் தங்குகிறார்கள்.

பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட இந்த ரிசார்ட்டில் இருக்கும் ராணி பங்களா மட்டும் பூட்டியே இருக்கும் நிலையில், ரிசார்ட்டின் புதிய மேலாளரான அங்காடி தெரு மகேஷ், அந்த அறையை திறந்து சுத்தப்படுத்தி, அதில் விருந்து ஒன்றுக்கு ஏற்பாடு செய்கிறார்.

அந்த விருந்து முடிந்த பிறகு அங்கிருந்த இரண்டு பெண்கள் மாயமாகி விடுவதோடு, நாயகன் ஸ்ரீபதியும், மற்றொரு விருந்தினரும் அடித்துக்கொள்கிறார்கள்.

அப்போது, அங்கு திடீர் வருகை தரும் போலீஸ் அதிகாரி சத்யராஜ், நடத்தும் விசாரணையில் அந்த ரிசார்ட்டின் மர்மங்கள் என்ன? மாயமான பெண்களின் நிலை என்ன? என்பதை திகில் நிறைந்த பின்னணியில் சொல்வது தான் ‘அங்காரகன்’.

நாயகனாக நடித்திருக்கும் ஸ்ரீபதி புதுமுகம் என்றாலும் நடிப்பு, ஆட்டம், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்திலும் அசத்தியுள்ளார். எந்த நேரமும் சரக்கும் கையுமாக இருக்கும் அவர், சரக்கை தேடி அலையும் காட்சிகள் நம்மை சிரிக்க வைக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் நியாவுக்கு ஒரு பாடல், சில காட்சிகள் என்றாலும் அதில் அவருக்கென்று கொடுத்த காதாபாத்திரத்திற்கு கேற்றார் போல சிறப்பாக நடித்திருக்கிறார்.

அங்காடித்தெரு மகேஷ், அப்புக்குட்டி, கே.சி.பிரபாத், ரெய்னா காரத் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். சத்யராஜ் மொட்டை தலையுடன் மீண்டும் வில்லனாக மிரட்டியிருக்கிறார். ஆனால் அவரது நடிப்புக்கு தீனி போடும் அளவுக்கு காட்சிகளில் அழுத்தம் இல்லாதது ஏமாற்றம்.

ஆரம்பத்தில் போலீஸ் அதிகாரியாக விசாரணை நடத்தும் சத்யராஜ், திடீரென்று அவதாரம் எடுப்பதும் அதை சரியான முறையில் சொல்லாமல் கோட்டை விட்டு விட்டனர்.

திரைக்கதை எழுதிய ஸ்ரீபதி தான் தடுமாறியிருக்கிறார் என்றால் ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் மோகன் டச்சு அதை விட மோசம். ஒரு கதையை எப்படி சொல்ல வேண்டும் என்ற குறைந்தபட்ச அனுகுமுறை கூட இல்லாமல் காட்சிகளை கையாண்டு முழு படத்தையும் சொதப்பியிருக்கிறார்.

கு.கார்த்தியின் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்றபடி பயணித்திருக்கிறது.

மாயமான பெண்கள் நிலை என்ன? என்ற விசயம் மட்டும் படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தினாலும், அந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு அடுத்தடுத்த காட்சிகள் நகராமல் திரைக்கதை தொய்வாக நகர்கிறது.

மொத்தத்தில் அங்காரகன் திரைப்படம் சுவாரஸ்யம் குறைவு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *