கோவையில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அனைத்து மதத்தினரும் இணைந்து கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் – ஆலயத்திற்கு சிறப்பு பிரார்த்தனைக்கு வந்த பொது மக்களுக்கு பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்ற இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள்.

இயேசு கிறிஸ்து பிறந்தநாளை கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ தேவாலயங்களில் இதனை முன்னிட்டு சிறப்பு ஜெபவழிபாடு, கூட்டுப் பிரார்த்தனை ஆகியவை நடைபெற்று வருகிறது.


இதன் தொடர்ச்சியாக கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, கோவை ரத்தினபுரி பகுதியில் உள்ள புனித சின்னப்பர் ஆலயத்தில் மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. பல் சமய நல்லுறவு இயக்கம் சார்பாக கொண்டாடப்பட்ட கிறிஸ்துமஸ் விழாவில் இந்து, இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து கேக் வெட்டி கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து சிறப்பு வழிபாட்டிற்காக ஆலயத்திற்கு வருகை தந்த பொதுமக்கள், குழந்தைகள், பெரியவர்கள் ஆகியோருக்கு மூன்று மதத்தினரும் பூங்கொத்து மற்றும் இனிப்புகள் கொடுத்து வரவேற்றனர். சமத்துவம் மற்றும் சகோதரத்தை போற்றும் வகையில் அனைத்து மதத்தினரும் ஒன்றிணைந்து கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியது பலரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.