மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கீழஉரப்பனூர் கிராமத்தில் அதிமுக முன்னாள் அமைச்சரும் திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அதிமுக பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற அதிமுக பூத்கமிட்டி கூட்டத்தில் அப்பகுதியில் 100 நாள் திட்டத்தில் வேலை பார்த்த பணியாளர்களை பெண்கள் மற்றும் முதியவர்களை அழைத்து வந்து கூட்டத்தில் அமர வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து., கூட்டத்திற்கு வந்தவர்களிடம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உரையாற்றினார். அதில் குட் கமிட்டி நிர்வாகிகள் முக்கியத்துவம் குறித்து பேசிவிட்டு வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் நிற்கும் வேட்பாளருக்கு பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி அடைய செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து., அதிமுக பூத் கமிட்டி கூட்டம் முடிந்த பின் 100 நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளர் மற்றும் வேலைத்திட்ட பெண்கள் அனைவரும் தங்களது வேலைப்பொருட்களை எடுத்துக்கொண்டு சென்றனர். இதுகுறித்து செய்தியாளர் கேட்டதற்கு 100 நாள் வேலை திட்ட பெண்கள் தங்களை கூட்டத்திற்கு அழைத்து வந்ததாகவும் மற்றும் சிலர் செல்போனை வீடியோ எடுப்பது பார்த்து நாங்கள் சும்மா வந்ததாகவும் வேலை நடந்து கொண்டிருக்கும்போது அருகில் கூட்டம் நடந்தது அதனால் வந்ததாகவும் தெரிவித்தனர். இதனை காட்சிப்படுத்திக் கொண்டிருந்த செய்தியாளரை அங்கிருந்த அதிமுக நிர்வாகி ஒருவர் ஒருமையில் பேசியதுடன் சேரை எடுத்து அடிக்க முற்பட்டார்.