அதிமுகவில் கடந்த சில நாட்களாக ஒற்றை தலைமை விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜூன் 23ஆம் தேதி நடந்த அதிமுக பொது குழு மற்றும் செயற்குழு கூட்டம் கலவரத்தில் முடிந்தது. இதையடுத்து வருகின்ற ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலளாராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வரும் ஜூலை 11ஆம் தேதி நடைபெற இருக்கும் அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் இரட்டைத் தலைமை தேர்தல் ரத்து செய்யப்படும் என்றும் உறுப்பினர்களால் பொதுச்செயலாளரை தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்குவது குறித்த முடிவுகளை பற்றியும் அறவிக்கப்படும் என தகவல்கள் சொல்லப்படுகிறது.
இருந்தாலும் பொதுக்குழு கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளனர் . ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்று இதனை நாளை அவசர வழக்காக நீதிமன்றம் விசாரிக்கிறது. பொதுக்குழு நடக்கும் தேதிக்கு 15 நாட்களுக்கு முன்பாகவே அழைப்பிதழ் வழங்க வேண்டும் என்ற நிலையில், தங்களுக்கு மாலை தான் பொதுக்குழுவுக்கான அழைப்புதல் அனுப்பப்பட்டதாகவும் ஓபிஎஸ் தரப்பினர் தங்கள் மனுவில் கூறியுள்ளனர். இதனால் நாளை அவசர வழக்காக நீதிமன்றம் இதனை விசாரிக்க உள்ளது. இது அதிமுகவில் புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.