விருதுநகர் மேற்கு மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பாக பாராளுமன்றம் நோக்கி பாசறை சிறப்பு பயிற்சி பட்டறை என்ற தலைப்பில் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்கான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும், விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசியதாவது.., பாராளுமன்ற தேர்தல் விரைவில் வர உள்ளது. சொன்னதை செய்ததும், செய்வதை சொல்லுவதும் தான் அ.தி.மு.க.வின் வழக்கம். இந்த கட்சி தான் ஏழைக்காக உழைக்கும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். சத்துணவு திட்டம், கோவில்களில் அன்னதான திட்டம், தாலிக்கு தங்கம், சைக்கிள், லேப்டாப், மகளிருக்கு மோட்டார் சைக்கிள் திட்டம் என பல்வேறு திட்டங்களை அறிவித்து செய்து காட்டியவர் ஜெயலலிதா. டாக்டர்கள் அரசு பள்ளியில் படித்த கிராமப்புற மாணவர்களின் டாக்டர் கனவை நிறைவேற்ற 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு பெற்று தந்தது எடப்பாடி பழனிச்சாமி. இதன் மூலம் பல நூறு மாணவ, மாணவிகள் தற்போது டாக்டருக்கு படித்து வருகிறார்கள்.
எப்போதும் கொடுத்த வாக்குறுதிகளை அ.தி. மு.க. நிறைவேற்றி தரும். ரேசன் கார்டு உள்ள அனைவருக்கும் பேன். மிக்சி, கிரைண்டர் வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றப்பட்டது. அந்த துறைக்கு நான் தான் அமைச்சராக இருந்தேன். அ.தி.மு.க. இனம், மதங்களை கடந்தது. அ.தி.மு. க.வை அழிக்க நினைப்பவர்கள், அழிந்து போவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.