நடிகை மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
பட்டியலினத்தவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துகளை தெரிவித்ததாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், நடிகையும், மாடல் அழகியுமான மீரா மிதுன், மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் சாம் அபிஷேக் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
பின்னர், நடந்த விவகாரம் குறித்து பகிரங்க மன்னிப்பு கோரிய மீரா மிதுன் மற்றும் அவரது ஆண் நண்பருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு, முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மீரா மிதுன் ஆஜராகவில்லை. போலீசார் தரப்பு விசாரணைக்கு மீரா மிதுன் ஒத்துழைப்பு தருவதே இல்லை என தெரிவித்தனர்.
இதையடுத்து, அவருக்கு எதிராக ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார். மேலும் அவரை கைது செய்து ஏப்ரல் 4ம் தேதி ஆஜர்படுத்த மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், தற்போது மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடிகை மீரா மிதுனை சென்னையில் கைது செய்துள்ளனர். வரும் ஏப்ரல் 4ம் தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு பின்னர் நீதிமன்றத்தின் முன் அவரை ஆஜர் படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.