தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யுடன் உரையாடியதாக கனவு கண்டேன் என நடிகர் பார்த்திபன் தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான விஜய், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அவருக்கு பல நடிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகர் விஜய்க்கு ஆதரவாக நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தொடர்ந்து பேசி வருகிறார். நடிகர் விஜய்யின் எழுச்சியும், அவரது முதல் மேடைப்பேச்சும் பிரமாதமாக இருந்தது. அடுத்தடுத்து நல்ல முன்னேற்றம் இருக்கிறது என்றெல்லாம் பார்த்திபன் பேசியிருந்தார். இதனால் அவரிடம் தவெகவில் இணையப்போகிறீர்களா என்று கேள்வி எழுப்பியதற்கு, “விஜய் அழைத்தாலும் அவரது கட்சியில் சேரமாட்டேன்” என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் தவெக தலைவர் விஜய்யுடன் உரையாடியதாக கனவு கண்டேன் என தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் பார்த்திபன் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், நேற்றிரவு நேற்றைய நண்பரும், இன்றைய தவெக தலைவருமான திரு விஜய் அவர்களுடனான ஊடலான உரையாடல் , பஜ்ஜியுடன் தேனீர் ருசித்தல், வெளியில் கசியா ரகசிய அரசியல் வியூகம் அமைத்தல் இப்படி விடிய விடிய நீண்ட சுவாரஸ்ய நிகழ்வுகள். சரி அதை பதிவு செய்ய ஒரு selfie எடுத்துக்கொள்ளலாமே எனப் பார்த்தால்…அது கனவு!
ஏந்தான் இப்படியொரு பகல் கனவு இரவில் வருதோ? ஆனா சத்தியமா வந்தது. கனவுகள் நம் நினைவுகளின் நகல்கள் எனச் சொல்வார்கள். சமீபமாக என்னிடம் அவர் பற்றிய கேள்விகள் அது சம்மந்தமான மந்தமான என் பதில்கள்… இப்படி சில பல! காரணமாக இருக்கலாம் என்று பதிவிட்டுள்ளார். தவெகவில் சேர விருப்பம் தெரிவிக்கிறீர்களா என நடிகர் பார்த்திபனுக்கு இணையவாசிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.