• Sat. Apr 20th, 2024

இலங்கைத் தமிழர்களை தாயகம் அனுப்ப நடவடிக்கை.. அமைச்சர் தகவல்..!

ByA.Tamilselvan

Sep 7, 2022

தாயகம் செல்ல விருப்பம் தெரிவித்தால் இலங்கை தமிழர்களை சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல்.
வேலூர் மாவட்டம், மேல்மொணவூரில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு 11 கோடி ரூபாயில் 220 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும் போது.. , “தமிழகத்தில் முதல்கட்டமாக 7 ஆயிரம் இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு 317 கோடி ரூபாய் மதிப்பில் வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறக்க உள்ளார். வேலூரில் ரூ.11 கோடி மதிப்பில் 55 தொகுப்புகளாக 220 வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் 6 மாதத்திற்குள் முடிக்கப்படும்.தமிழகம் நோக்கி வருகின்ற இலங்கைத் தமிழர்களை தாய் உள்ளத்தோடு தமிழக அரசு பாதுகாப்பு அளித்து வருகிறது. தமிழகத்தில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு குடியுரிமை பெற மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தற்போதைய சூழ்நிலையில் இலங்கைத் தமிழர்கள் மீண்டும் தாயகம் செல்ல விருப்பம் தெரிவித்தால், அதற்கேற்ப சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்க தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *