வைகை அணை தனது முழு கொள்ளளவான 71 அடியில் 69 அடியை எட்டி நிரம்பியுள்ள சூழலில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் கனவு திட்டமான உள்ள உசிலம்பட்டி 58 கிராம பாசன கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க கோரி உசிலம்பட்டி கோட்டாச்சியர் அலுவலகத்தில் கோட்டாச்சியர் ரவிச்சந்திரனிடம் உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் பி.அய்யப்பன் கோரிக்கை மனு அளித்தார்.
மேலும், திருமங்கலம் பிரதான கால்வாய்க்கு கடந்த செப்டம்பர் மாதமே வைகை அணையிலிருந்து நீர் திறந்து விட்டிருக்க வேண்டிய சூழலில், தற்போது வரை நீர் திறக்கப்படவில்லை என்றும், திருமங்கலம் பிரதான கால்வாயிலும் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
உசிலம்பட்டி 58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்க நிரந்தர அரசானை வழங்க விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் சூழலில் தமிழ்நாடு அரசு விரைவில் 58 கால்வாயில் நிரந்தரமாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.