• Fri. Mar 29th, 2024

திருமாவளவன் கருத்தால் இடியாப்ப சிக்கலில் எதற்கும் துணிந்தவன்!

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10, 2022 ஆம் நாள் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிடுகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ், பிரியங்கா மோகனன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

இந்தநிலையில், பா.ம.க மாணவர் அணியின் மாநிலத் செயலாளர் விஜயவர்மன் கடலூர் மாவட்ட திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்துக்குக் நேற்று கடிதம் எழுதியிருந்தார். அந்தக்கடிதத்தில், ‘திரைப்பட நடிகர் சூர்யா நடித்து கடந்த 2021 நவம்பர் 02 ஆம் தேதியில் வெளியான ஜெய்பீம் திரைப்படம் த.செ.ஞானவேல் இயக்கிய திரைப்படத்தை 2டி நிறுவனம் மூலம் தயாரித்து நடித்திருந்தார். இருளர் சமுதாய மக்களின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ள உண்மைச் சம்பவ அடிப்படையில் எடுக்கப்பட்ட திரைப்படம். அதில் வழக்கறிஞர் சந்துரு அதே பெயரில் இருக்க கதாபாத்திரத்தில் வந்த அனைவரும் அதே கதாபாத்திரத்தில் நடிக்க எஸ்.ஐ அந்தோணிசாமி என்ற தலித் கிருத்துவர் மட்டும் குருமூர்த்தி என்ற கதாபாத்திரத்தை வன்னியராக சித்தரிக்கப்பட்டுள்ளது.

காவல் உதவி ஆய்வாளராக நடித்தவர் ஒரு ஜாதி வெறியர் போல சித்தரித்து வன்னியர்களின் அடையாளமான அக்கினி கலசத்தை அவர் வீட்டில் காட்சிப்படுத்தி காவல் உதவி ஆய்வாளரை வன்னியர் சமுதாயத்தை சார்ந்தவர் என்றும் ஒட்டு மொத்த வன்னிய சமுதாய மக்கள் ஜாதி வெறி வன்மம் உள்ளவர்கள் போல காட்டியுள்ளனர். சகோதரத்துவமாக உள்ள இருளர், வன்னியர் சமுதாயத்தில் ஜாதி வன்மத்தை தூண்டும் விதமாக இத்திரைப்படம் எடுத்திருப்பது வன்னியர்களை கொச்சப்படுத்தும் விதமாகவும், வன்முறையாளர்களாகவும் தொடர்ந்து சித்தரித்துவரும் சூர்யாவின் திரைப்படத்தை, அவர் வன்னியர் மக்களிடம் பொது மன்னிப்பு கேட்காதவரை கடலூர் மாவட்டத்தில் ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என பாட்டாளி மக்கள் சார்பாகவும், வன்னியர் சங்கம் சார்பாகவும் கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இது கடலூர் மாவட்டத்துடன் முடிந்துவிடாது வட மாவட்டங்கள், மற்றும் பாமக வலுவாக இருக்கும் சேலம் மற்றும் திருச்சி, தஞ்சை, திருவாரூர், கும்பகோணம், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும் இது பரவக்கூடும் என நேற்று குறிப்பிட்டிருந்தோம். விஜயவர்மன் கடிதம் கிடைத்தவுடன் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுசெயலாளர் ரோகிணி பன்னீர்செல்வம் எதற்கும் துணிந்தவன் படம் திரையிடுவதற்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு உள்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியிருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் வட்டாரத்தில் கூறுகின்றனர். எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிடுவது சம்பந்தமாக உள்ளூர் சூழலுக்கு ஏற்ப திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு எடுத்துக்கொள்ளுமாறு சங்கத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் 550 திரையரங்குகளில் எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது வடமாவட்டங்களில் கணிசமான திரையரங்குகளின் உரிமையாளர்களாக வன்னியர்கள் உள்ளனர். வியாபார ரீதியாக படத்தை திரையிட ஆர்வமாக இருந்தாலும் சொந்த சமூகத்தை பகைத்துக்கொள்ள வேண்டுமா என்கிற தயக்கம் நிலவுகிறது.

இதற்கு இடையில், பா.ம.க சார்பில் சூர்யாவுக்கு கொடுக்கப்படும் அரசியல் நெருக்கடியை கவன ஈர்ப்பு அரசியலாகவே பார்க்கவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சென்னை நந்தனத்தில் இன்று காலை நடைபெற்ற தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘பா.ம.க.-வின் கவன ஈர்ப்பு அரசியல் காரணமாக முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சி வருத்தத்திற்குரியது எனத் தெரிவித்தார். மேலும், பா.ம.க.வின் இச்செயல் கவன ஈர்ப்புக்காக செய்யப்படுகிற ஒரு அரசியலாகத் தான் தெரிகிறது. நடிகர் சூர்யாவை பொருத்தவரையில் ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் படிக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு பல பத்தாண்டுகளாக ஏராளமான அருட்கொடைகளை ஆற்றி வரக்கூடியவர். .

சாதி மதம் மொழி என்ற வரம்புகளைக் கடந்த நிலையில், அனைத்து தரப்பு மக்களின் நன்மதிப்பைப் பெற்று வளர்ந்து வருகிற வளர்ந்திருக்கிற ஒரு திரைக்கலைஞன். அவருக்கு இத்தகைய அரசியல் நெருக்கடி கொடுப்பது ஏன் என்று விளங்கவில்லை. தொடர்ந்து இதுபோன்ற கவன ஈர்ப்பு அரசியலை செய்வது பா.ம.க-வின் வாடிக்கையாக இருக்கிறது. இது வருந்தத்தக்க ஒரு நிலைப்பாடாக இருக்கிறது. உள்ளபடியே நான் அதற்காக வருத்தப்படுகிறேன் எனத் தெரிவித்திருந்தார்.

இது காலை 11 மணிக்கு தொலைக்காட்சிகளில் செய்தியாக வெளியான பின்பு எதற்கும் துணிந்தவன் படத்திற்கு எதிரான மனோநிலை வன்னிய சமூகத்தினரிடம் அதிகரிக்க தொடங்கியுள்ளது “சும்மா கெடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி” என்கிற கதையாகி போனது திருமாவளவன் கருத்தால் என்கின்றனர். திரையரங்க உரிமையாளர்கள் வட்டாரத்தில் இப்படம் பற்றிய சிந்தனையே இல்லாமல் இருந்த பாமக, மற்றும் வன்னிய சமுதாய மக்களிடம் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் காரணமாக எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட விடக்கூடாது என்கிற எதிர்ப்பு மனநிலை அதிகரித்து வருகிறது என்கின்றனர்.

பாமக வலிமையாக இருக்கும் மாவட்டங்களில் உள்ள திரையரங்க உரிமையாளர்கள் விஜயவர்மன் அறிக்கை சம்பந்தமாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ், கதாநாயகன் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் ஆகியோர் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை படத்தில் பங்கேற்றுள்ள இதர கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்களும் தனிப்பட்ட முறையில் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவிடவோ, ஊடகங்களுக்கு பேட்டி தரவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

படத்தை தமிழ்நாடு முழுவதும் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் நேரடியாக வெளியிடுவதால் உரிய பாதுகாப்பு கிடைக்கும் என்கிற நம்பிக்கை திரையரங்குகளுக்கு கொடுக்கப்பட்டாலும் சிறு அசம்பாவிதம் நடந்தாலும் இழப்பு லட்சங்களில் இருக்கும் அதனை யாரிடம் கேட்பது என்கிற தயக்கம் திரையரங்கு உரிமையாளர்களிடம் உள்ளது எதற்கும் துணிந்தவன் படத்தை திரையிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள தியேட்டர்களில் பெரும்பான்மையானவை நவீனப்படுத்தப்பட்ட, விலை உயர்ந்த இருக்கை வசதி கொண்டவையாகும் ஒரு பக்கம் பயம், மற்றொருபுறம் சூர்யா படத்தை திரையிட்டால் கல்லா கட்டலாம் என்கிற ஆசை இரண்டுக்கும் மத்தியில் திரையரங்கு உரிமையாளர்கள் தடுமாற்றத்துடன் உள்ளனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *