• Fri. May 8th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

மூட்டையில் சடலமாக ஆடு மேய்க்கும் தொழிலாளி..,

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நாகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன்(45). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவர் ஆடுகள் வாங்குவதற்காக அடிக்கடி வெளியூர் சென்று வருவதை வழக்கமாக கொண்டிருந்தார்.‌

இந்நிலையில் முருகன் கடந்த மூன்று தினங்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.‌ ஆடுகள் வாங்க வெளியூர் சென்று இருப்பார் என குடும்பத்தினர் நினைத்த நிலையில் முருகன் மூன்று தினங்களாக வீட்டிற்கு வரவில்லை என்பதால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரது குடும்பத்தினர் அருகில் உள்ள கிராமங்களில் தேடியுள்ளனர்.

இந்நிலையில் இன்று காலை முஷ்டகுறிச்சியை சேர்ந்த காசி என்பவர் முஷ்டகுறிச்சியில் உள்ள தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக கிணற்றில் தண்ணீர் எவ்வளவு உள்ளது என பார்த்துள்ளார். அப்போது கிணற்றில் சாக்கு மூடை ஒன்று மிதந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த காசி உடனடியாக ஆவியூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். முதலில் காட்டுப்பன்றி தான் ஏதோ இறந்து கிடக்கிறது என நினைத்த காசி பின்னர் தான் அது மூடை என்பதை அறிந்தார்.

காசியின் தோட்டத்திற்கு விரைந்து வந்த ஆவியூர் காவல் நிலைய போலீசார் அந்த சாக்கு மூடையில் மனித உடல் இருப்பது போன்று தெரிய வந்ததால் காரியாபட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு விரைந்து வந்த காரியாபட்டி தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் அந்த சாக்கு மூட்டையை வெளியே எடுத்து வந்தனர்.

அந்த சாக்கு மூடையை திறந்து பார்த்தபோது அதில் காணாமல் போன ஆடு மேய்க்கும் தொழிலாளி நாகனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த முருகன் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார். முருகனை மர்மநபர்கள்‌அடித்து கொலை செய்து கை கால்களை இறுக்கி சாக்கு முட்டையில் கட்டி கிணற்றில் தூக்கி வீசி சென்றது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

முருகன் உடலை கைப்பற்றி ஆவியூர் காவல் நிலைய போலீசார் பிரேத பரிசோதனைக்காக விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாவட்ட எஸ்பி கண்ணன் தலைமையில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து முருகனை கொலை செய்தது யார் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றதா என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.