ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை ரயில்வே பாதுகாப்பு படை துரிதமாக செயல்பட்டு உயிரை காப்பாற்றினர்.
கோவையில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி ஒருவர் ரயில்வே பாதுகாப்புப் படையினரின் (RPF) துரிதச் செயலால் உயிர் பிழைத்தார்.
கொல்லம் – திருப்பதி ரயில், திருப்பூர் ரயில் நிலையத்தைக் கடக்கும் போது, பயணி ஒருவர் தவறி விழுந்ததாக RPF-க்கு தகவல் கிடைத்தது. விபத்து நடந்த சரியான இடம் தெரியாத நிலையில், டிக்கெட் பரிசோதகர் சேலம் வணிகக் கட்டுப்பாட்டுக்குத் தகவல் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டவரின் நண்பர் அதே பெட்டியில் திருப்பதிக்குச் சென்று கொண்டு இருந்ததால், அவரது உதவியுடன் கைபேசி எண்ணைக் கண்டறிந்து, இருப்பிடத்தைக் கண்டறியும் முயற்சியில் போலீசார் இறங்கினர். கைபேசியின் இருப்பிடம் கோவை ரயில் நிலையத்தில் இருந்து 11 கி.மீ தொலைவில் உள்ளதாகக் கண்டறியப்பட்டது.
உடனடியாக, கோவை ரயில்வே போலீசார் தேவராஜன், சுமேஷ் மற்றும் மனுபிரசாத் ஆகியோரைக் கொண்ட குழுவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நீலிகோணம் பாளையம் அருகே ரயில் தண்டவாளப் புதர் பகுதியில் தேடிய போது, ஒருவர் படுகாயங்களுடன் கைபேசியுடன் இருப்பதைக் கண்டனர்.
காயமடைந்தவர் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீராமன் கே (38 வயது) என்பது தெரியவந்தது. அவர் தனது குடும்பத்தினருடன் ராஜேஷ் என்பவரின் பேரனுக்கு மொட்டை அடிக்கும் விழாவிற்காகத் திருப்பதிக்குச் சென்று கொண்டு இருந்தார். ரயில் கதவுகள் வேகமாகத் திறக்கப்பட்டதால் அவர் வெளியே தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது.
ஸ்ரீராமனின் தலையில் மூன்று இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்ததோடு, உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டு இருந்தன. சம்பவ இடத்திலேயே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஸ்ரீராமனின் உடல்நிலை தற்போது ஆபத்தில் இல்லை என்றும், இருப்பினும் தலையில் ஏற்பட்ட காயங்கள் கடுமையானவையாக உள்ளதால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவர்களும் தெரிவித்து உள்ளனர்.
