



கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே புதுப்பாளையத்தில் இன்று காலை முதல் பரிதாபகரமான சம்பவம் ஒன்று நிகழ்ந்து உள்ளது.
அப்பகுதியில் உள்ள அணைக்கட்டில் தேங்கி உள்ள முழுமையான சாக்கடை நீர் மற்றும் ஆகாயத் தாமரை எனப்படும் அடர்ந்த செடி புதர்களுக்குள் குரங்கு ஒன்று சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கிறது. காலை 6 மணி முதல் குளத்தின் நடுவே இருந்த பட்டுப்போன மரத்தின் மீது அமர்ந்து இருக்கும் அந்த குரங்கு, வெளியேற முடியாமல் தவித்து வருகிறது.


சாக்கடை நீரின் துர்நாற்றம் மற்றும் அடர்ந்த செடிகளால் குரங்கின் நிலை மேலும் கவலை அளிக்கிறது.
உள்ளூர் மக்கள் குரங்கின் பரிதாப நிலையைக் கண்டு வேதனை அடைந்து உள்ளனர். உடனடியாக குரங்கை மீட்க வனத் துறையின் உதவி அவசரமாகத் தேவைப்படுகிறது. வனத் துறையினர் விரைந்து வந்து உரிய நடவடிக்கை எடுத்து குரங்கின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
தகவல் அறிந்த வனத்துறையினர் அந்த குரங்கை மீட்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அங்கும், இங்கும் தாவிக் கொண்டு இருந்த குரங்கு குளத்தின் நடுவே மாட்டிக்கொண்டு பரிதவிக்கும் காட்சி பார்ப்போரை பரிதாபப்பட வைத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

