தஞ்சையில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்து சில மணிநேரமே ஆன பெண் சிசு அவசர சிகிச்சைப் பிரிவு கழிவறைக்குள் நீரில் மூழ்கடித்து கொலை செய்யப்பட்டுள்ளது.
குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதும், காவல்துறையினருக்கு மருத்துவமனை நிர்வாகத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், விசாரணையை தொடங்கியுள்ளனர். முதற்கட்டமாக சிசிடிவி காட்சிகள் பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதில் சந்தேகத்துக்கு இடமாக, கர்ப்பிணியான பெண் ஒருவர் மாஸ்க் மற்றும் தலையில் துணிபோர்த்தியபடி தன் அடையாளங்களை மறைத்துக்கொண்டு கழிவறைக்குள் செல்லும் காட்சி பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பெண் பற்றிய விசாரணையை விரைவுபடுத்தியுள்ளனர் காவல்துறையினர். அடுத்தடுத்தகட்ட விசாரணையிலேயே நடந்தது என்ன என்பது முழுமையாக தெரியும் என்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தை இல்லை என்று கோவில் கோயிலாகவும், லட்சம் லட்சமாக செலவு செய்வோர் மத்தியில் இதுபோன்று கல்நெஞ்சம் படைத்தவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.