சேலம் மாநகராட்சியில் குப்பைகளை பிரித்து வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடு வீடாகச் சென்று பேனா கொடுத்து வித்தியாசமான விழிப்புணர்வு ஏற்படுத்திய மாமன்ற உறுப்பினர்கள்
தமிழகத்தில் அழகிய சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன், அடுத்த தலைமுறைக்கு தூய்மையான இயற்கை சூழலை உருவாக்க “எனது குப்பை எனது பொறுப்பு” எனும் திட்டத்தை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சேலம் மாநகராட்சி 34-வது கோட்டத்தில் சீர்மிகு தெரு என்ற புதிய செயல்பாடு திட்டம் தற்போது துவங்கப்பட்டுள்ளது. நெ.2- புது தெருவில் இன்று நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் வீடுகள் தோறும் குப்பைகளை பெறும்போது குப்பைகள் தரம் பிரித்து தருவதை உறுதி செய்யும் வகையில் அவற்றை சுகாதார பணியாளர்கள் பதிவேட்டில் பதிவு செய்தனர்.
மேலும் சுகாதார பணியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களோடு மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ, வீடு வீடாகச் சென்று குப்பைகளை தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனா ஒன்றையும், விழிப்புணர்வு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.
மேலும் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 கோட்டங்களுக்கும் முன்னெடுப்பாக இந்த 34வது கோட்டத்தை தூய்மையான குப்பை இல்லா டிவிசனாக மாற்ற முயற்சி எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.