கோவை தண்ணீர் பந்தல் பகுதியில் பல மாதங்களாக ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பாலக் கட்டுமானப் பணியின் போது, அங்கு தோண்டப்பட்டு இருந்த குழியில் சைக்கிளில் சென்ற முதியவர் ஒருவர் கீழே விழுந்து படுகாயம் அடைந்த நெஞ்சை பதறவைக்கும் சி.சி.டி.வி (CCTV) காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விபத்து நடந்த பின்னரே கான்ட்ராக்டர் அவசர, அவசரமாகப் பாதுகாப்புப் பலகை வைத்ததாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.
கோவை, தண்ணீர் பந்தல் பிரதான சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் தற்பொழுது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதற்காகச் சாலையின் நடுவே ஆங்காங்கே ஆழமான அஸ்திவாரக் குழிகள் தோண்டப்பட்டு, இரும்பு கம்பிகள் நட்டப்பட்டுப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், அந்த வழியாகத் தனது சைக்கிளில் சாதுவாகச் சென்று கொண்டு இருந்த நபர் ஒருவர், மேம்பாலக் கட்டுமானப் பணிக்காகத் தோண்டப்பட்டு இருந்த ஆபத்தான குழியைக் எதிர்பாராத விதமாகச் சைக்கிளோடு அந்த ஆழமான குழியினுள்ளே விழுந்தார்.
குழிக்குள் இரும்பு கம்பிகள் மற்றும் சிமெண்ட் கட்டைகள் இருந்ததால், அவர் படுகாயம் அடைந்து உள்ளேயே சிக்கிக் கொண்டார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள், உடனடியாக ஓடி வந்து குழிக்குள் இறங்கி, படுகாயம் அடைந்த முதியவரைப் போர்க்கால அடிப்படையில் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
மேம்பாலக் கட்டுமானப் பணிகளைச் செய்யும் தனியார் ஒப்பந்ததாரர், மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்தச் சாலையில் தோண்டப்பட்டு உள்ள ஆபத்தான குழிகளைச் சுற்றி எவ்வித பாதுகாப்புத் தடுப்புகளையோ அல்லது எச்சரிக்கைப் பலகைகளையோ வைக்காமல் அலட்சியமாகப் பணிகளை மேற்கொண்டு வந்ததே இந்த விபத்திற்குக் காரணம் எனப் பொதுமக்கள் கொதித்தெழுந்தனர்.
மிகக் கொடூரமான விஷயம் என்னவென்றால், விபத்து ஏற்பட்டு முதியவர் குழிக்குள் விழுந்த செய்தி காட்டுத்தீ போலப் பரவிய உடனே, தங்களது சட்டபூர்வக் குற்றத்தை மறைப்பதற்காகப் பாலம் கட்டும் கான்ட்ராக்டர் மற்றும் ஊழியர்கள், அவசர, அவசரமாக ஓடிவந்து விபத்து நடந்த அந்த இடத்தை சுற்றிலும் தற்பொழுது ‘பாதுகாப்புப் பலகைகளை’ வைக்கும் நாடகத்தை அரங்கேற்றி உள்ளனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த அந்த முதியவருக்கு, விபத்தை ஏற்படுத்திய பாலம் கட்டும் கான்ட்ராக்டர் தரப்பில் இருந்து இதுவரை எவ்வித மருத்துவ உதவிகளோ ? அல்லது முதல் உதவியோ ? செய்து தரப்படவில்லை எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அக்குவேறாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.
கோவையில் தொடர்ந்து நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகளில் இது போன்ற விபத்துகள் தொடர்கதையாகி வருவதால், மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி அதிகாரிகளும் தலையிட்டு, அலட்சியமாகச் செயல்பட்ட ஒப்பந்ததாரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கோவை மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.




