பல்லடம் அருகே மாதப்பூர் கிராமத்தில் வேலை நேரத்தில் கிராம நிர்வாக அலுவலர் மது போதையில் மயங்கி கிடந்த புகைப்படங்கள் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் மாதப்பூரில் கூடுதல் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ஜெகநாதன். மதியம் மாதப்பூர் ஊராட்சி துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் என்பவர் சாலை பிரச்சனை குறித்து கிராம நிர்வாக அலுவலர் ஜெகநாதனை தொடர்பு கொண்டுள்ளார். பாலசுப்பிரமணியத்திடம் ஜெகநாதன் மது போதையில் மரியாதை குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து கிராம நிர்வாக அலுவலர் தேடிய பாலசுப்பிரமணியம் ஜெகநாதனை பல இடங்களில் தேடியுள்ளார்.
ஒரு வீட்டின் அருகே ஜெகநாதன் மது போதையில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். பணி நேரத்தில் மது அருந்திவிட்டு மயங்கி கிடந்த ஜெகநாதன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்துள்ளார். இது குறித்து வட்டாட்சியர் ஜெய்சிங் சிவகுமாரிடம் கேட்டபோது பணி நேரத்தில் மது போதையில் இருந்த ஜெகநாதன் மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். பணி நேரத்தில் மது போதையில் மயங்கி கிடந்த கிராம நிர்வாக அலுவலரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.