• Fri. Apr 19th, 2024

தோலம்பாளையம் கிராமத்தில் 9 மாதமாக செயல்படாத ஆழ்துளை கிணறு

Byகா.பாபு

Dec 8, 2022

தோலம்பாளையம் கிராமத்தில் ஆழ்துளை அமைக்கும் பணி நிறைவு 9 மாதமாக பயன்பாட்டுக்கு வராததால் பொதுமக்கள் அவதி
மேட்டுப்பாளையம் அருகே தோலம்பாளையம் ஊராட்சியில் ஆழ்துளை கிணறு அமைத்து 9 மாதங்களாகியும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளதால் கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேட்டுப்பாளையம் அருகே காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தோலம்பாளையம் ஊராட்சியில் 12 வார்டுகள் உள்ளது. இதில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் குடியிருந்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் நீலாம்பதி, ஊக்கையனூர், மொட்டியூர், ஊக்கப்பட்டி, மேல்பாவி குளியூர், செங்குட்டை, பட்டிசாலை, காலணிபுதூர், சீங்குழி, ஆலங்கண்டி, ஆலங்கண்டிபுதூர், ஆலங்கண்டி கீலூர், கோனாரி உள்ளிட்ட கிராமங்களில் 3 ஆயிரம் பழங்குடியின மக்கள் உள்ளனர். இதனிடையே 9, 10 வார்டுகளுக்குட்பட்ட தோலம்பாளையம் கிராமத்தில் மட்டும் சுமார் 1500 பேர் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதியில் உப்பு தண்ணீர் பற்றாக்குறையாக உள்ளதால் இங்கு ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீா வழங்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனிடையே கடந்த 2020-21ஆம் ஆண்டு 15வது மானிய நிதிக்குழு திட்டத்தின் மூலம் ரூ.5 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைத்து பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த 9 மாதத்திற்கு முன் தொடங்கப்பட்டது. இதில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டது. ஆனால் கிணற்றில் இருந்து இதுவரை சின்டெக்ஸ் தொட்டிக்கு தண்ணீர் குழாய் மூலம் ஏற்றாமல் அப்படியே காலியாக வைத்துள்ளனர். இதனால் இந்த தொட்டியில் உள்ள குழாய்கள் பழுதடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவைக்காக அவசர அவசரமாக தொடங்கப்பட்ட இப்பணி முடிந்தும் மக்களின் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. ஆனால் பணிகள் நிறைவடையாமல் இதற்கான தொகை முழுவதையும் ஒப்பந்ததாரருக்கு வழங்கி உள்ளதாக கிராம மக்கள் புகார் கூறி வருகின்றனர். எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் இதுதொடர்பாக உரிய ஆய்வு செய்து பாதியில் நிற்கும் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *