தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி சந்தித்து பேசினார். மேற்கு வங்காள முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இரண்டு நாள் பயணமாக இன்று மாலை சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவரை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன் ஆகியோர் வரவேற்றனர். மேற்கு வங்காள ஆளுநர் இல.கணேசனின் இல்ல விழாவில் பங்கேற்பதற்காக வந்துள்ள மம்தா பானர்ஜி, சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அப்போது கொல்கத்தா இனிப்பு வகைகளை முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த சந்திப்பு தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.