மாட்டுத்தாவணி பகுதியிலுள்ள தனியார் விடுதியில் வளரும் தமிழகம் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நிறுவன தலைவர் பட்டாபிராமன் தலைமை வகித்தார். பொது செயலாளர் இமான்சேகரன், மாவட்ட தலைவர் துரைபாண்டி, மாவட்ட செயலாளர் சின்னராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மற்றும் இந்த கூட்டத்திற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து கட்சியின் பொறுப்பாளர்கள் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் கட்சியின் நிறுவனர் தலைவர் பட்டாபிராமன் செய்தியாளர்களிடம் கூறியது, தமிழகத்தில் சமூக நீதியும் தமிழ் சமுதாய விடுதலையும் பாதுகாப்பதே எங்கள் கட்சியின் முக்கிய நோக்கமாகும். மத்திய, மாநில அரசுகள் தற்போதைய மக்கள் தொகையின் அடிப்படையில் 100 சதவிகித ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளுக்கு மேலாகியும் பலருக்கு வீடு இல்லை.
அறக்கட்டளை என்ற பெயரில் பலர் சட்ட விரோதமாக சேர்த்து வைத்துள்ள பல ஆயிரம் ஏக்கர் அசையா சொத்துக்களை பறிமுதல் செய்து நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் ஒப்பந்த பணிகளில் பட்டியலின மக்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். நாட்டில் தரிசு நிலங்களாக உள்ள ஆயிரக்கணக்கான நிலங்களை கையகப்படுத்தி இயற்கை வேளாண் பண்ணை மற்றும் தொழிற்சாலைகள் அமைத்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும். வியாபார பொருளாக மாறிவிட்ட கல்வியை மத்திய, மாநில அரசுகள் ஏற்று நடத்தி அனைவருக்கும் இலவச கல்வி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தார்.