மலை மாடுகள் வளர்க்கும் விவசாயியை வனத்துறை அதிகாரி தாக்கிய விவகாரம். கம்பம் திமுக எம்.எல்.ஏ, மேகமலை வன கோட்ட உதவி வன பாதுகாவலர் பேச்சுவார்த்தையை அடுத்து முடிவடைந்தது.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள முத்து கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் மலை மாடுகள் வளர்க்கும் விவசாயி ஜெமினி. அவரை வனத்துறை அதிகாரி தரக்குறைவாக பேசி, தாக்கியதாக கூறி அவரது உறவினர்கள் மற்றும் மலை மாடுகள் வளர்ப்போர் சங்கத்தினர் நேற்று பிற்பகலில் இருந்து சின்னமனூர் வனசரக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
விவசாயியை தாக்கிய வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஏறக்குறைய 5 மணி நேரத்திற்கு மேலாக வன சரகர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வந்தவர்களுடன் ,கம்பம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ராமகிருஷ்ண, மேகமலை வனக் கோட்ட உதவி வன பாதுகாவலர் ரவிக்குமார் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர் .
விவசாயி ஜெமினியை தாக்கிய வனத்துறை அதிகாரி மீது சின்னமனூர் காவல் நிலையத்திலும், துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி, ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக தேனி மண்டல துணை இயக்குனரிடம் மலை மாடுகள் வளர்ப்போர் சங்கப் பிரதிநிதிகள் சார்பில் புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டதை அடுத்து, தற்போதைக்கு போராட்டம் கைவிடப்பட்டது.