குடும்ப தலைவிகளுக்கு ஸ்மார்ட் போன் இலவசம் என்று அறிவித்துள்ளதோடு மட்டுமல்லாமல் மூன்று ஆண்டுகளுக்கு இணைய சேவையும் இலவசம் என்று அறிவித்துள்ளது ராஜஸ்தான் அரசு.
ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதை முன்னிட்டு அந்த மாநிலத்தில் தேர்தல் பணிகளில் இப்போதே கட்சிகள் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன. தேர்தலை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு பட்ஜெட்டில் முதல்வர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தை மாநில முதல்வர் அசோக் கெலாட் அறிவித்தார். அந்த அறிவிப்பின்படி சிரஞ்சீவி சுகாதார காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்திருக்கும் ஒரு கோடியே 35 லட்சம் குடும்பத் தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட் போன் வழங்கப்பட இருக்கிறது. அதோடு மூன்று ஆண்டுகளுக்கு இணைய இணைப்பு இலவசமாக அளிக்கப்படுகிறது. இதற்காக திட்ட செலவு பன்னிரண்டாயிரம் கோடி ஆகும் என்று மதிப்பிடப்பட்டு இருக்கிறது. இதற்கிடையில் இந்த திட்டத்திற்கு டெண்டர் விடப்பட்டிருக்கிறது. இணைய இணைப்பு அளிப்பதற்கு மூன்று தொலைதொடர்பு நிறுவனங்கள் முன் வந்திருக்கின்றன. அந்த மூன்று நிறுவனங்களில் ஒரு நிறுவனம் விரைவில் தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறது. பண்டிகை காலம் தொடங்குவதற்கு முன்பாக முதற்கட்ட ஸ்மார்ட் ஃபோன்களை வழங்குவதற்கான பணிகளை முடுக்கி விட்டிருக்கிறது ராஜஸ்தான் அரசு.