தஞ்சாவூர் மாவட்டம் களிமேட்டில் மக்கள் நடத்தியது தேர் திருவிழாவே அல்ல. அதற்கு அனுமதியும் பெறவில்லை என அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்தார்.
தஞ்சையில் கோயில் திருவிழா விபத்தில் இதுவரை மொத்தம் 11 பேர் உயிரிழந்துவிட்டனர். மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர் .பிரதமர் ,முதல்வர்உள்ளிட்ட தலைவர்கள் இரங்கள் தெரிவித்தும் நிவாரண உதவிகள் அறிவித்துள்ளனர்.
இந்த நிலையில் தேர் விபத்து தொடர்பாக இன்று சட்டசபையில் அனைத்து உறுப்பினர்களுக்கும் கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பொதுவாக கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸ் மீது முதல்வர் விளக்கம் அளித்து பேசுவார். ஆனால் தற்போது முதல்வர் தஞ்சை செல்வதால் அவருக்கு பதில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு விளக்கம் அளிப்பார் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சட்டசபை கூடியதும் தேர் திருவிழா விபத்து குறித்து கவன ஈர்ப்பு தீர்மான நோட்டீஸின் மீது உறுப்பினர்கள் பேசினர். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது தேர் திருவிழாக்களின் போது பாதுகாப்பு அளிக்க வேண்டும். தஞ்சை மாவட்ட நிர்வாகம் பாதுகாப்பு அளிக்கவில்லை என குற்றம்சாட்டி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த நிலையில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தஞ்சை மாவட்டம் களிமேட்டில் நடந்தது தேர் திருவிழா அல்ல. அது தேரும் அல்ல. சப்பர திருவிழா. இந்த சப்பர திருவிழாவை அரசு அனுமதி பெறாமலேயே பொதுமக்கள் நடத்தியுள்ளனர் என அமைச்சர் சேகர் பாபு விளக்கமளித்தார்.