• Sat. Apr 18th, 2026
WhatsAppImage2026-04-16at222113
previous arrow
next arrow
Read Now

பிஞ்சு குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய்க்கு 15 நாட்கள் சிறை!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மணலப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மோட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் வடிவழகன். இவருக்கும், ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியில் வசித்த துளசி என்ற பெண்ணுக்கும் 2016ம் ஆண்டு திருமணம் நடந்தது. 3 வருடமாக, சென்னை தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். இவர்களுக்கு, பிரதீப் என்கிற ஒன்றரை வயது குழந்தை மற்றும் கோகுல் என்ற 3 வயது ஆண் குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில், 2019 காலகட்டத்தில் இவர்கள் சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூர் கிராமத்திற்கு குடி வந்தனர். சில நாட்களாக வேறு ஒருவரிடம் தொடர்ந்து தொலைபேசியில் துளசி பேசி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், வடிவழகன் தனது மனைவி துளசியிடம் சண்டையிட்டுள்ளார்.

இந்நிலையில் தான் ஒன்றரை வயதான குழந்தை பிரதீப்பை துளசி கொடுமைப்படுத்தி வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.இதையடுத்து குழந்தையை தாக்கிய தாய் துளசி மீது செஞ்சி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் தந்தை வடிவழகன் புகார் அளித்தார். 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், துளசியிடம் விசாரணை நடத்த ஆந்திராவுக்கு விரைந்தனர்.

குழந்தையின் தந்தை வடிவழகன் அளித்த புகாரில் தாய் துளசியை சித்தூர் மாவட்டம் ராம்பள்ளியில் உள்ள அவருடைய தாய் வீட்டில் வைத்து போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். அப்போது போலீசாரிடம் துளசி, “கள்ளக்காதலன் பிரேம் குமார் உடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தான் பச்சிளம் குழந்தையை தாக்கினேன்” என பகீர் வாக்குமூலத்தில் கொடுத்துள்ளார். தற்போது சென்னை அழைத்து வரப்பட்ட துளசியை, விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கு அழைத்து வரும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டனர்.

இன்று காலை விழுப்புரம் அழைத்து வரப்பட்ட துளசி செஞ்சி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து 15 நாள் நீதிமன்ற காவலில் துளசியை சிறையிலடைக்க செஞ்சி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தினேஷ் உத்தரவிட்டுள்ளார்.