தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் மார்ச் 12ம் தேதி, அனைத்து நீதிமன்ற வளாகங்களில் ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடை பெற உள்ளது.
தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய ஐந்து நீதிமன்றங்கள் மாவட்டத்தில் உள்ளன. இந்த நீதிமன்ற வளாகங்களில் மார்ச் 12ல், தேனி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் ‘லோக் அதாலத்’ எனப்படும் மக்கள் நீதிமன்றம் நடை பெற உள்ளது. இந்த மக்கள் நீதிமன்றத்தில், வாகன விபத்து இழப்பீடு தொடர்பாக நீண்ட நாள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள், பணம் தொடர்பான உரிமையியல் வழக்குகள், வங்கி கல்விக் கடன், காசோலை, ஜீவனாம்சம், நில ஆக்கிரமிப்பு, குடும்ப வன்முறை சட்ட வழக்குகள், தொழிலாளர் நல இழப்பீடு வழக்குகள், நுகர்வோர் மற்றும் இதர பொதுப் பயன்பாடு வழக்குகள் மீது விசாரணை நடத்தி தீர்வு காணப்படும். எனவே பொதுமக்கள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் நடைபெறும் மக்கள் நீதிமன்றத்தில் கலந்து கொண்டு பயன் பெறலாம் என, மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி ஜி.விஜயா தெரிவித்துள்ளார்.